ஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி.! தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி
Recommended Video
திருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடையாததால், தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2019-2020-ம் கல்வியாண்டிற்கான மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகள், சோதனை என மாணவர்கள் தேர்வெழுதும் முன் அலைக்கழிக்கப்பட்டனர். ஃபனி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தில் மட்டுமே நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஒடிசா மாணவர்களுக்கு தனியாக 20-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் தேர்வை எழுத சுமார் 15.19 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களில் 14.10 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று www.nta.ac.in, www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது
நடப்பாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 9.01 சதவீதம் அதிகமாகும்.
இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத திருப்பூரை சேர்ந்த மாணவி ஒருவர், இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி ரிதுஸ்ரீ என்பவரே நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்ற வேதனையில் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
ரிதுஸ்ரீ 12-ம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்துள்ள நிலையில், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் இந்த துயர முடிவை எடுத்துள்ளதாக அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
இதில் மேலும் துயரம் என்னவெனில் நன்றாக படிக்க கூடிய மாணவி ரிதுஸ்ரீ, நீட் தேர்வில் ஒரே ஒரு மதிப்பெண்ணில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தால் மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications