இதுதான் மனித நேயம்... திருப்பூரில் ஆதரவற்ற பெண் உடலை அடக்கம் செய்த போலீஸ் ஏட்டு.. குவிந்த பாராட்டு
திருப்பூர்: திருப்பூர் மாநகரம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் பின்புறம் உள்ள கேது கோவில் அருகில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்த பெண் உடல் நலக்குறைவால் அண்மையில் காலமானார். அவரது உடலை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய தலைமைக்காவலர் மோகன் மனிதநேய அறக்கட்டளை மூலமாக தெற்கு ரோட்டரி மின்மயானம் அருகில் அடக்கம் செய்தார். இந்த தகவலை கேட்டு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி வெகுவாக பாராட்டினார்.
யாசகம் பெற்று வாழ்பவர்கள் இந்தியா முழுவதுமே மிக அதிகம். உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், விதியின் வசத்தால் பிச்சை எடுத்து வாழ்கிறார்கள். உண்மையில் தனியாக பிச்சை எடுத்து வாழ்பவர்களை பொறுத்தவரை உடல் நிலை சரியில்லாமல் போனால் பார்க்க யாருமே இருக்க மாட்டார்கள். அவர்களின் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள யாருமே இருக்க மாட்டார்கள்.. ஏன் அவர்களின் மரணம் கூட கொடுமையானதாக இருக்கும்.

பிள்ளைகள், அண்ணன், தம்பி, அக்கா, மாமா, சித்தப்பா, பெரியம்மா, அத்தை , மாமா , நண்பர்கள், உறவினர்கள் எல்லாருமே இருந்தும் இன்றைக்கு பலரது இறுதி ஊர்வலங்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.. துக்க வீடுகளில் அவசர அவசரமாக உறவுகள் வெளியேறிவிடுவார்கள். ரத்த உறவுகளை தவிர மற்ற உறவுகளை அடுத்த நாள் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
எல்லா உறவுகளும் உள்ளவர்களின் நிலையே இப்படியாகிவிட்ட நிலையில், அனாதைகளின் நிலையை யோசித்து பாருங்கள். அவர்களை அடக்கம் கூட செய்ய ஆள் இல்லாமல் மரணித்துப்போவார்கள்.. அப்படிப்பட்டவர்களை அடக்கம் செய்யவும் சில தன்னார்வலர்கள் இருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட ஒருவரை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் பின்புறம் உள்ள கேது கோவில் அருகில் பெரியாயிபாளையத்தை சேர்ந்த 48 வயதான ராணி என்பவர் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். இவருக்கு கடந்த 19-ந்தேதி இரவு ராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 20-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த ராணிக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் இதுவரை அவருடைய உடலை யாரும் உரிமை கோர முன்வரவில்லை. இதையடுத்து ராணியின் உடலை திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய தலைமைக்காவலர் மோகன் மனிதநேய அறக்கட்டளை மூலமாக தெற்கு ரோட்டரி மின்மயானம் அருகில் அடக்கம் செய்தார். ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்த தலைமைக்காவலர் மோகனை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி வெகுவாக பாராட்டினார்.












Click it and Unblock the Notifications