உடுமலையில் அமைச்சரின் உதவியாளரை கடத்தி விடுவித்ததால் குழப்பம்.. கடத்தியது ஏன்?..விடுவித்தது யார்?
திருப்பூர்: உடுமலை சட்டமன்ற அலுவலகத்தில் பட்டப்பகலில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் உதவியாளரை கடத்தி அவரிடம் இருந்த நகை, செல்போனை பறித்துக் கொண்டு தளி பகுதியில் இறக்கி விட்டுச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடத்தல் ஏன் நடந்தது, உதவியாளரை விடுவித்தது ஏன் என தெரியாமல் கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கால்நடைத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் தனி உதவியாளராக இருந்து வருபவர் கர்ணன் (34). இவர் புதன்கிழமை காலை 11:30 மணியளவில் உடுமலை அன்சாரி வீதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் தொகுதி அலுவலகத்தில் இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத சில நபர்கள் காரிலிருந்து இறங்கி வந்து கர்ணனை அடித்து துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து அங்கிருந்த பணிப்பெண் கற்பகம் உடுமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி விசாரணை செய்து வருகிறார்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வேளான் மசோதா நகலை எரித்து போராட்டம்.. ஏராளமானோர் கைது
குமரவேல்
மேலும் கடத்தப்பட்ட அமைச்சரின் உதவியாளரை தளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாளவாடி பகுதியில் இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து அப்பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் குமரவேல் வீட்டில் கர்ணன் தஞ்சம் அடைந்தார்.
உடுமலை சட்டமன்ற அலுவலகம்
பின்னர் குமரவேல் இல்லத்திற்கு காவல் துறை கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் விசாரணை நடத்தினார். இதுகுறித்து கர்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் உடுமலை சட்டமன்றத்தில் வழக்கம்போல் பணிக்கு வந்தேன். அப்போது நான்கு பேர் அடங்கிய கும்பல் அலுவலகத்தில் என்னை அடித்து மிரட்டியது.
4 பவுன் நகை
பின்னர் பணம் கேட்டு என்னை கடத்திச் சென்றனர். என்னிடம் இருந்த 4 பவுன் நகை , செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த அந்த கும்பல் தளி அருகே வாளவாடி பகுதியில் என்னை இறக்கி விட்டு சென்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கர்ணன் தெரிவித்தார்.
தனிப்பட்ட காரணங்கள்
இதுகுறித்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறுகையில், தனிப்பட்ட காரணங்களுக்காக கர்ணன் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கர்ணனோ அந்த கும்பல் தன்னிடம் முதலில் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிவித்த நிலையில் திடீரென அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக கடத்திவிட்டதாக கூறியுள்ளார் என்றார் உடுமலை ராதாகிருஷ்ணன்.
உதவியாளர்
இந்த கடத்தல் விவகாரத்தில் அமைச்சரும், உதவியாளரும் முரண்பட்ட கருத்துகளை கூறுவதால் குழப்பம் நிலவி வருகிறது. இதற்கிடையில் முகமூடி அணிந்த நபர்கள் காரில் கர்ணனை கடத்திய சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.