5 சவரன் வரை நகையை அடமானம் வைத்து பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும்- ஸ்டாலின் புதிய அறிவிப்பு
திருப்பூர்: கூட்டுறவு மற்றும் பொதுத் துறை வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து சிறு விவசாயிகள் பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.
திருப்பூர் பெருமாவல்லூரில் இந்திய கம்யூ வேட்பாளர் சுப்பராயனுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாக்குச் சேகரித்தார். அப்போது அங்கே ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் அரசியல் திருப்பங்களுக்கு பெயர் பெற்ற ஊர் திருப்பூர்.
தமிழகத்தில் 18 சட்டசபைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இடைத்தேர்தலில் தோற்றால் எடப்பாடியால் நீடிக்க முடியாது என்பதால் தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்.

குட்டி சிங்கப்பூர்
வேலூர் மாவட்டத்தின் ஆம்பூர், குடியாத்தம் இடைத்தேர்தலை நிறுத்த சதி செய்கிறார்கள். வேலூரில் பணம் சிக்கியதாக காரணம் காட்டுகிறார்கள். குட்டி சிங்கப்பூராக இருந்த திருப்பூரை சீரழித்தது மோடி அரசு.

தொழில்கள் முடக்கம்
மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் திருப்பூரில் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்தன. தவறான பொருளாதார கொள்கைகளால் திருப்பூரில் தொழில்களை முடக்கியதால் மக்கள் இங்கு வேலையின்றி தவித்து வருகின்றனர்.

பின்விளைவுகள்
தொழிலாளர்களையும் தொழில் செய்பவர்களையும் மோடி அரசு வதைக்கிறது. மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியில் 4.70 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். மோடி அரசுக்கு தேர்தல் ஆணையம் துணை போனால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இலவச மின்சாரம்
மோடியும் எடப்பாடியும் நாட்டு மக்களின் நிம்மதியை கெடுத்து விட்டனர். ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே மோடி ஆட்சி செய்து வருகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் எங்கே சென்றாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாயிகள் கேட்காமலேயே இலவச மின்சாரத்தை கொண்டு வந்தார் கருணாநிதி. 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இது தேர்தல் அறிக்கையிலும் சேர்க்கப்படும் என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications