திருப்பூர்,கோவை தொழில் முனைவோருக்கு புதிய நெருக்கடி.. ரத்து செய்யப்படும் ஆர்டர்கள்.. என்ன நடக்கிறது?
திருப்பூர்: தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் இருந்து தான் ஜவுளி ஏற்றுமதி பெருமளவு நடக்கிறது. கோவை, ஈரோட்டில் ஆடைகள் உற்பத்தி அதிகமாக இருக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை பின்னாடை உற்பத்தி அதிகமாக உள்ளது. இந்த சூழலில் வளைகுடா போரால் செயற்கை நூலிழை விலை உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் போரால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோர்களை நெருக்கடிக்கு தள்ளி உள்ளது.
கொங்கு மண்டலத்தின் முக்கிய நகரமான கோவையில் இருந்து ஜவுளி, வெட்கிரைண்டர், மோட்டார் பம்ப், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதிகிறது. இவை பெரும்பாலும் குவைத், ஷார்ஜா, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பக்ரைன் உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர் பதற்றம் காரணமாக பெரும்பாலான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் செங்கடல் பகுதியில் நிலவும் பதற்றத்தால் சரக்கு கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவையில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி, வெட்கிரைண்டர் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் எனில், போர் பதற்றத்தால் ஹோர்முஸ் முனையை ஈரான் மூடியிருக்கிறது. இது எண்ணெய் போக்குவரத்து மட்டுமின்றி, வளைகுடா நாடுகளுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்து வந்தது. இந்த வழித்தடம் மூடப்பட்டதால் ஆப்பிரிக்காவை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டிக்கிறது இதனால் சரக்குகளை கொண்டு செல்ல 20 முதல் 25 நாட்கள் வரை தாமதம் ஏற்படுகிறது.
இது தொடர்பாக கோவை ஜவுளி தொழில் துறையினர் கூறுகையில், "ஹோர்முஸ் முனை மூடப்பட்டதால், நன்னம்பிக்கை முனை வழியாக ஆப்பிரிக்காவை சுற்றி சரக்குகளை கொண்டு செல்லும்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் வர்த்தகம் நடைபெறுவது தடைபட்டிருக்கிறது. மேலும் போக்குவரத்து செலவு, ஆர்டர்கள் ரத்து, கட்டாயத் தள்ளுபடி விலைக்கு விற்க வேண்டிய அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
அதேபோல் ஹோர்முஸ் முனை மூடப்படுவதால் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக செயற்கை நூலிழையின் விலை உயரும் அபாயம் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர், வளைகுடா நாடுகளுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் போர் பதற்றத்தால் ஏற்றுமதி குறையும் நிலை உருவாகி உள்ளது என்று கவலை தெரிவித்தனர்.
இது ஒருபுறம் எனில் போர் பதற்றம் காரணமாக வெளிநாட்டு வர்த்தகர்கள் கடந்த சில நாட்களாக ஆர்டர்களை ரத்து செய்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கி வருவதால் தொழில் முனைவோர்கள் முடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications