சேலம் டூ செங்கப்பள்ளி 6 வழிச்சாலையாக மாறுது.. திருப்பூர், கோவை, ஈரோடுக்கு மத்திய அரசு குட்நியூஸ்
திருப்பூர்: சேலம் முதல் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி வரையிலான 102.5 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையான என்ஹெச் 544ஐ, தற்போதுள்ள 4 வழிச்சாலையிலிருந்து 6 வழிச்சாலையாக தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன், கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கோவை (நீலம்பூர்) முதல் செங்கப்பள்ளி வரை உள்ள 54 கி.மீ தொலைவிலான சாலை தற்போது ஆறுவழிச்சாலையாக,அதுவும் அதிவேக சாலையாக உள்ளது. சென்னை திருச்சி சாலை போலவே, மதுரை பெங்களூர் சாலைபோலவே குறுக்கீடுகள் இந்த 54 கிலோ மீட்டருக்கு சுத்தமாக இருக்காது. எல்லாமே மேம்பாலத்தில் தான் இருக்கும். குறுக்கிடுகளுக்கு வாய்ப்பே இருக்காது.

மிக தரமாக தொலைநோக்கு பார்வையுடன் கோவை முதல் திருப்பூர் மாவட்டம் செங்கம்பள்ளி வரை ஆறுவழிச்சாலை அமைக்கப்பட்டிருக்கும். எங்குமே மக்கள் குறுக்கே வரமாட்டார்கள். தமிழ்நாட்டின் மிகத்தரமான உயர்தர நெடுஞ்சாலை கோவை செங்கம்பள்ளி சாலை தான். ஆனால் செங்கம் பள்ளிக்கு அப்படியே மாறிவிடும்.. வெறும் 4 வழிச்சாலையாவே இருக்கிறது.
திருப்பூர் எம்பி கோரிக்கை
இந்நிலையில் திருப்பூர் லோக்சபா எம்பி கே. சுப்பராயன், கடந்த மூன்று ஆண்டுகளாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து இது தொடர்பாகப் பலமுறை மனுக்களை அளித்து வந்தார். அந்த கோரிக்கையை ஏற்று சேலம் முதல் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி வரையிலான 102.5 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையை ஆறுவழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு
இதுகுறித்து எம்.பி. சுப்பராயன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு அளித்த மனுவில் கூறுகையில், "சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை கேரளாவின் பாலக்காடு, திருச்சூர் மற்றும் கொச்சியுடன் இணைக்கும் மிக முக்கியமான பாதையாக இந்த நெடுஞ்சாலை உள்ளது. கோவையிலிருந்து செங்கப்பள்ளி வரை ஏற்கனவே 6 வழிச்சாலையாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், செங்கப்பள்ளியிலிருந்து சேலம் வரையிலான 102.5 கி.மீ பகுதி இன்னும் 4 வழிச்சாலையாகவே உள்ளது.
30000 வாகனங்கள்
தினமும் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தப் பாதையில் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் எரிபொருள் விரயமாவதுடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இதனை விரைந்து விரிவாக்கம் செய்ய வேண்டும்" இவ்வாறு கூறியிருந்தார்
மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதில்
இது தொடர்பாக திருப்பூர் எம்.பி. சுப்பராயனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், இதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகி வருகிறது.. அந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
பவானி அருகே மேம்பாலம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒருபுறம் மேம்பாலம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டு, அதற்கான டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. மற்றொரு புறம் மேம்பாலம் அமைப்பது குறித்து சேலம் - செங்கப்பள்ளி திட்ட அறிக்கையின் ஆய்வுக்குப் பின் முடிவு செய்யப்படும்" இவ்வாறு கூறியுள்ளார். செங்கம்பள்ளி முதல் சேலம் வரை ஆறுவழிச்சாலையை அரசு அமைத்தால் நிச்சயம் அது கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications