வார்த்தையை விட்ட பிரேமலதா.. கையில் எடுத்த எல் முருகன்.. ஸ்டாலின், ஆ ராசா குறித்து விமர்சனம்
திருப்பூர்: முதல்வர் ஸ்டாலினுக்கு வெக்கம் மானம் சூடு சுரணை இருந்திருந்தால் பிரேமலதா பேசியதற்கு தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார் என மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் பேட்டி அளித்துள்ளார். பெண்களுக்கு எதிரான நிலையில் திமுக உள்ளதால், ஆ.ராசா வெளியே வருவதற்கு பயந்து கூட இருக்கலாம் என்றும் எல் முருகன் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அவிநாசி தொகுதி வேட்பாளரும், மத்திய இணை அமச்சருமான எல்.முருகன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பாத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே உயர் பதவிக்கு வர வேண்டும் என மிகப்பெரிய துரோகத்தை பெண்களுக்கு செய்துள்ளனர் . 23ம் தேதி திமுகவை தண்டிப்பார்கள். 13 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் மத்திய அரசு கொடுத்துள்ளது.

2014 ல் இருந்து ஆண்டுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 800 கோடி தான் வழங்கப்பட்டது. 14 வந்தே பாரத் ரயில்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வசதி எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு செய்யப்பட்டுள்ளது. 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி ஏர்போர்ட் அமைக்க அதிமுக ஏற்பாடு செய்த நிலையில் அதனை வழங்காமல் திமுக தாமதம் செய்து இப்போது தான் கொடுத்துள்ளனர். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது .
சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மித்ரா டெக்ஸ்டைல் பார்க், சிறுகுறு நிறுவனங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது. 1.50 கோடி பேருக்கு இலவச கேஸ் இணைப்பு, முத்ரா கடன், 125 நாளாக வேலை வாய்ப்பு திட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு திட்டம், சுயஉதவி திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம்.
நேற்று முதல்வர் ரோட் ஷோ அவிநாசியில் செய்தாலும் மக்கள் வரவில்லை. அவராக நடந்து சென்று வாக்கு கேட்டு சென்றுள்ளார். ரஜினி எப்போதும் ஆன்மீகத்தின் பக்கம். அது மக்களுக்கு தெரியும்.
முதல்வருக்கு அரசியல் தெளிவு இல்லை. யாரோ எழுதி தருவதை பேசி வருகிறார். விடுதலை அடைந்த போது இருந்த மக்கள் தொகை தற்போது அதிகரித்துள்ள நிலையில் கூடுதல் எம்.பிக்கள் தேவை. வயநாட்டில் உள்ளவர்கள் தனது எம்.பியை காண 250 கிலோமீட்டர் பயணிக்க முடியாது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். நீலகிரியில் ராஜா தான் இருக்க வேண்டுமா.. ராணி வரக்கூடாதா? திமுகவிற்கு சமூக நீதி குறித்து பேச அருகதை இல்லை.
அவிநாசியில் விஜய்க்கு 5 ஆயிரம் பேர் தான் கூடியிருந்தார்கள். பலம் மிக்க கட்சியாக பாஜக உள்ளது. தேவைப்படும் நேரத்தில் நானும் ராஜ்யசபா சென்று வாக்களிப்பேன். பெண்களுக்கு எதிரான நிலையில் திமுக உள்ளதால் ஆ.ராசா வெளியே வர பயமாக கூட இருக்கலாம். ஸ்டாலினுக்கு வெக்கம் மானம் சூடு சுரணை இருந்திருந்தால் பிரேமலதா பேசியதற்கு தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications