பல்லடத்தில் மூவர் கொலை..எல்லாமே உங்க அரசாங்கத்தின் தப்பு தான்! அமைச்சரை பேச விடாமல் குமுறிய பெண்கள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த 28ஆம் தேதி மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் இதுவரை சிக்காத நிலையில், போலீசார் அமைத்துள்ள தனிப்படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்த அமைச்சர் சாமிநாதனை கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கடந்த 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் சேமலைக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், மகன் செந்தில்குமார் ஆகியோரை மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது.

மேலும் வீட்டிலிருந்த எட்டு சவரன் தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டது. இதை அடுத்து கொலை கும்பலை பிடிக்க போலீசார் விசாரணையை துவக்கினர். மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் உத்தரவைத் தொடர்ந்து, டிஐஜி சரவண சுந்தர் மேற்பார்வையில் 10 தனிப்படை போலீசார் களத்தில் இறங்கினர்.
தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் குற்றவாளிகள், குற்றவாளிகள் என பலரை விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்த நிலையில் அது தொடர்பாகவும் தனியே விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்து ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில் தற்போது வரை விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதை அடுத்து தனிப்படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது.
ஏற்கனவே பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் இதே போல கொலை சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போல ஒரு சம்பவம் நடந்துள்ளது போலீசாரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட தெய்வசிகாமணி குடும்பத்தினருக்கு எந்தவித முன் விரோதமோ அல்லது பிரச்சனையோ இல்லை என தெரியவந்துள்ளது. இதன் காரணமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொலையிலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்.
10 தனிப் படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்த, தற்போது 14 தனி படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்தில் நடந்த கொடூரமான கொலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காங்கேயம், பல்லடம், அவிநாசி, தாராபுரம், திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட செந்தில்குமார் குடும்பத்தினரை தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்து துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது கொலையான செந்தில்குமாரின் மனைவி உள்ளிட்ட உறவினர்கள் அமைச்சரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். "மூன்று பேர் கொலை செய்யப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் இதுவரை கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது தோட்டத்து வீட்டில் வசிக்கும் அனைவரும் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வருகிறோம்.

அவிநாசி பாளையத்தில் காவல் நிலையம் இருந்தாலும் ஒரு சிசிடிவி கூட இல்லை. இந்த கொலை அனைத்துக்கும் முழுக்க முழுக்க நீங்கள்தான் காரணம்.. காவல்துறை சுதந்திரமாக இல்லை.. அவர்களை சுதந்திரமாக நடமாட விட வேண்டும்" என அமைச்சரை பேசவிடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து" கள்ளக்கிணறு பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தற்போது கொலையாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலையாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்" என அமைச்சர் சாமிநாதன் உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications