திருப்பூர் மேயர் வீட்டுக்கு அபராதம் விதித்த மின் வாரியம்.. மின் இணைப்பும் அதிரடியாக துண்டிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார். இவரது வீடு காங்கயம் ரோடு, புதுார் ரோடு பகுதியில் உள்ளது. தற்போது அங்கு ஒரு பகுதியில் வீடு விரிவாக்கம் செய்யும் வகையில் கட்டுமானப் பணி நடக்கிறது. இந்த கட்டுமானப் பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து அங்கு நேற்று மின் வாரிய பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். வீட்டு மின் இணைப்பில் கட்டுமானப் பணி நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த முறைகேட்டுக்கு 42,500 ரூபாய் அபராதம் விதித்து அந்த மின் இணைப்பை மின் வாரியத்தினர் துண்டித்தனர்.
ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டும்போது, சிமெண்ட் கலவை இயந்திரம், மின்சார வெட்டும் கருவிகள் போன்றவற்றை இயக்க தற்காலிக மின் இணைப்பு பெறுவது கட்டாயமாகும். ஆனால் புதிய கட்டுமானப் பணிகளுக்கு, வீட்டு இணைப்பைப் பயன்படுத்துவது விதிமீறலாகும். இதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் வீட்டில் 2,000 சதுர அடிக்குள் கூடுதல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டால், அதற்குத் தனியாக தற்காலிக மின் இணைப்பு பெறத் தேவையில்லை என ஒரு காலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம் கட்டுமானப் பணி 2,000 சதுர அடிக்கு மேல் இருந்தால், கண்டிப்பாகத் தற்காலிக மின் இணைப்புப் பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.

எனவே மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது, விதிமீறல் கண்டறியப்பட்டால், வீட்டு உபயோகக் கட்டண விகிதத்திற்குப் பதிலாக, அதிகமான வணிக ரீதியான அல்லது தற்காலிக இணைப்புக்கான கட்டண விகிதத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தியதாகக் கணக்கிடப்பட்டு, பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படும். அத்துடன் மின் இணைப்பையும் தற்காலிகமாக துண்டிப்பார்கள். அதுதான் நடைமுறையாகும்.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரின் வீடு காங்கயம் ரோடு, புதுார் ரோடு பகுதியில் இருக்கிறது. தற்போது அங்கு ஒரு பகுதியில் வீடு விரிவாக்கம் செய்யும் வகையில் கட்டுமானப் பணியை தினேஷ்குமார் நடத்தி வருகிறாராம். இதற்காக கட்டுமானப் பணி நடக்கும் பகுதியில் வீட்டு மின் இணைப்பை ஒப்படைத்து விட்டு, தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டிருக்கிறது.
தற்காலிக மின் இணைப்புக்கான டிபாசிட் தொகை செலுத்தாமல் அந்த மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கட்டுமானப் பணிக்கு வீட்டு மின் இணைப்பை பயன்படுத்துவதாக மின் வாரிய பறக்கும் படையினருக்கு தகவல் சென்றது. இதையடுத்து அங்கு நேற்று மின் வாரிய பறக்கும் படையினர் ஆய்வு செய்தனர். வீட்டு மின் இணைப்பில் கட்டுமானப் பணி நடந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்த முறைகேட்டுக்கு 42,500 ரூபாய் அபராதம் விதித்து அந்த மின் இணைப்பை மின் வாரியத்தினர் துண்டித்தனர்.
பணியில் அசட்டையாக இருந்த அப்பகுதியைச் சேர்ந்த கிழக்கு டவுன் பகுதி மின் ஊழியர்கள் இருவருக்கு விளக்கம் கேட்டு மின் வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதனிடையே மின் இணைப்பு விவகாரம் தொடர்பாக மேயர் தினேஷ்குமார் கூறுகையில், "எனது தாய் பெயரில் தற்காலிக மின் இணைப்பு பெற கடந்த அக். 13 ம் தேதி மின் வாரியம் தெரிவித்த டிபாசிட் தொகை 16,935 ரூபாயை செலுத்தினேன். ஆனால் மின் வாரியம் தற்காலிக மின் இணைப்பை தருவதில் தாமதம் செய்து விட்டது. தற்போது இந்த அபராத நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து மின் வாரியத்துக்கு சட்டரீதியாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.தற்போது வசிக்கும் வீட்டில் ஒரு பகுதியில் தான் கட்டுமானப் பணி நடக்கிறது. ஒரு பகுதியைப் பயன்படுத்தி வருகிறோம். எனவே, அந்த வீட்டு உபயோக மின் இணைப்பு பயன்பாட்டில் உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications