அப்பார்ட்மென்ட்டுக்குள் புகுந்த நமீதா.. "நம்ம மோடியை யாராலும் ஜெயிக்க முடியாது".. திகைத்த திருப்பூர்
திருப்பூர்: மோடி என்ற மாமனிதரை, யாராலுமே தோற்கடிக்க முடியாது என்று பிரபல நடிகையும், பாஜக நட்சத்திர பிரச்சாளருமான நமீதா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்
தமிழக பாஜகவில் பல பேச்சாளர்களும், பிரபலங்களும் இருக்கிறார்கள்.. ஆனால், இவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் சமயங்களில் மட்டுமே பிரச்சாரங்களில் தலையை காட்டுவார்கள். இதில் ஒருவர்தான் நமீதா.

இவர் பாஜகவில் அன்று சேர்ந்ததுமே, தமிழக மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள்.. பாஜகவில் நமீதா என்ன செய்ய போகிறார்? பிரச்சாரத்திற்கு போனாலும் என்ன பேச போகிறார்? என்ற ஆர்வம் கிளம்பியது.
தாமரை கட்சி: இப்படிப்பட்ட சூழலில்தான், "தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வார்த்தையை நமீதாவால் சரியாக உச்சரிக்க முடியாத வீடியோக்களும் இணையத்தில் அப்போது டிரெண்டாக துவங்கின. எல்.முருகன் அன்று மாநில தலைவராக இருந்தபோது, ஜே.பி. நட்டா முன்னிலையிலேயே கட்சியில் சேர்ந்துவிட்டதால், தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் நமீதாவை தேடி வந்தது.
எல்.முருகன் மாநில தலைமையில் இருந்தவரை, அடிக்கடி கட்சி கூட்டத்தில் தென்பட்டு கொண்டிருந்த நமீதா, தற்போது அவ்வளவாக எங்கும் தென்படாமலேயே இருந்தார்.. இப்போது, மீண்டும் நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எல்.முருகனை ஆதரித்து நமீதா, திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சாரம்: இன்று காலையில்கூட, திருமுருகன்பூண்டி பகுதியிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பாஜகவுக்காக வாக்கு சேகரித்தார் நமீதா.. அப்போது, அங்கிருந்த அப்பார்ட்மென்ட் ஒன்றிற்குள் திடீரென நுழைந்தும் தாமரை சின்னத்துக்காக வாக்கு கேட்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நமீதா, "தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் யாராவது, இந்த மக்களுக்கு வீடு கொடுத்துள்ளார்களா? ஆனால், மோடி அரச, ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு தந்திருக்கிறது.. வீடு மட்டுமலல, குடிநீர் வசதி, கரண்ட் வசதி உட்பட எல்லா வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.
தொகுதிகள்: 243 தொகுதிகளிலும், திமுக அரசு இதுவரை மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டுள்ளதா? ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையோ, அனைத்து தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் அடிப்படை தேவைகள் என்னென்னவென்று கேட்டிருக்கிறார்.. திமுக மக்களை பிரிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது.. அவர்களின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
காட்டுக்குள் யானையை எதிர்ப்பதற்காக, சிறு சிறு மிருகங்கள் எல்லாம் எப்படி ஒன்று சேருமோ, அதுமாதிரி இந்தியா கூட்டணியில் கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துள்ளன.. இருந்தாலும், மோடி என்ற பெரும் மனிதரை அவர்களால் தோற்கடிக்க முடியாது. அதனால், பிரதமர் மோடி மறுபடியும் வெற்றி பெற்று, கச்சத்தீவு விவகாரத்துக்கு ஒரு நல்ல நடவடிக்கையை மேற்கொள்வார்" என்றார் நமீதா.












Click it and Unblock the Notifications