திருப்பூரில் 22 கேஸ் சிலிண்டர்.. தாசில்தார் கனிமொழியிடம் அசிங்கப்பட்ட ராஜேஷ்குமார் யார் தெரியுமா
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே போத்தம்பாளையம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் பதுக்கல் வழக்கு திடீர்னு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. உரிமம் இன்றி வீட்டிலேயே 22 சிலிண்டர்களை வணிக ரீதியில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ஒருவர் மீது, குடிமைப்பொருள் வழங்கல் துறை பறக்கும் படை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவாகியுள்ளது.. இந்த சம்பவம் சாமானிய மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது தெரியுமா? அதுபற்றிய சுருக்கமான தகவல்களை இங்கே பார்க்கலாம்..
கடந்த மார்ச் மாதம் ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக தமிழகத்தில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தீவிரமான நிலை ஏற்பட்டது.. இந்தியாவின் மொத்த சமையல் எரிவாயு இறக்குமதியில் 85 முதல் 90 சதவீதம் வரை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டுவரப்படுவதால், போர் சூழல் நேரடியாக தமிழக சந்தையை பாதித்தது..

வணிக சிலிண்டர்கள்
ஹோட்டல்கள், உணவகங்கள், சிறு தொழில்கள் என நிறைய இடங்களில் வணிக சிலிண்டர் கிடைக்காமல் தவித்தனர்.. தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, எண்ணெய் நிறுவனங்களுக்கு சிலிண்டர் கையிருப்பு விவரம் கேட்கப்பட்டது.
இதனிடையே, மத்திய பெட்ரோலியத்துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகத்தில் எந்த தட்டுப்பாடும் இல்லை என்று விளக்கமும் அளித்தார்.. ஆனால் வணிக சிலிண்டர் விநியோகம் சில இடங்களில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.. இந்த பதற்ற சூழலையே சிலர் பதுக்கலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் கவலையான விஷயம்.
சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
ஏனென்றால் தமிழகத்தில் கியாஸ் சிலிண்டர் பதுக்கல் புதிய பிரச்சனை கிடையாது.. கோடை காலங்களில் மக்களின் தேவை அதிகரிக்கும்போது, சிலர் சிலிண்டர்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, சாதாரண மக்களுக்கு கிடைக்காமல் செய்துவிடுகிறார்கள்.. உரிமம் பெறாமல் வணிக ரீதியில் சிலிண்டர் விற்பனை செய்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்..
தற்போது தமிழகம் முழுவதும் குடிமைப்பொருள் வழங்கல் துறை பறக்கும் படை சோதனைகளை தீவிரமான முறையில் நடத்தி வருகிறது.. சென்னையில் 40 சிலிண்டர்கள், சேலத்தில் 79 சிலிண்டர்கள் என நிறைய இடங்களில் பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில்தான் திருப்பூரிலும் இன்னொரு வழக்கு பதிவாகியுள்ளது..
திருப்பூர் தாசில்தார் அதிரடி
நேற்று மதியம் பறக்கும் படை தனி தாசில்தார் கனிமொழி தலைமையில், தனி வருவாய் ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அவினாசி அருகே போத்தம்பாளையம் கிராமம் குழிக்காட்டுத் தோட்டம் பகுதிக்கு சென்று திடீர்னு சோதனை நடத்தினார்கள்.. அப்போது குடியிருப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் ஏராளமான கியாஸ் சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது..
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர், வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர்களை உரிமம் பெறாமல் வணிக ரீதியாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது கண்டறியப்பட்டது.. இதையடுத்து அங்கிருந்த 22 கியாஸ் சிலிண்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..
ராஜேஷ்குமார் மீது திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
சோதனைகள் நடக்கின்றன, வழக்குகள் பதிவாகின்றன.. ஆனால் சாமானிய மக்கள் கியாஸ் கிடைக்காமல் தவிக்கும் நிலை மாறவில்லை.. இந்த பதுக்கல் கும்பல்களை ஒழிக்க கடுமையான சட்டத் திருத்தம் எப்போது வரும் என்பதுதான் மக்களின் கேள்வி..!!!












Click it and Unblock the Notifications