திருப்பூர் ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவிக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உறவினர்கள்.. பாருங்க
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த சேவூரில் ரிதன்யா மாமியார் சித்ராதேவி கைது செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. சித்ராதேவியை புகைப்படம் எடுக்காத வண்ணமும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவூர் காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் சகஜமாக உலா வருவது போல் வீடியாக்கள் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த தொழில அதிபர் அண்ணாதுரை என்பவருடைய மகள் ரிதன்யாவுக்கு 27 வயது ஆகிறது. இவருக்கும், கைகாட்டிபுதூர் ஜெயம்கார்டன் பகுதியை சேர்ந்த பிரபல அரசியல் கட்சியைச் சேர்ந்த குடும்பமான ஈஸ்வரமூர்த்தி-சித்ரா தேவி தம்பதியின் மகன் கவின்குமார் (27) என்பவருக்கும் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணம்
திருமணத்தின் போது வரதட்சணையாக ரிதன்யா வீட்டில் 500 பவுன் நகை தருவதாக கூறி 300 பவுன் நகை போட்டதாக கூறப்படுகிறது. ரூ.70 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் ரூ.2.5 கோடி செலவு செய்து மிகவும் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இவ்வளவு செய்தும், ரிதன்யா சந்தோஷமாக வாழவில்லை
என்ன பிரச்சனை
கவின் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி (51), மாமியார் சித்ராதேவி (47) ஆகிய இருவரும் ரிதன்யாவிடம் மீதமுள்ள 200 பவுன் நகை இன்னும் தரவில்லை என்று கூறி டார்ச்சர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே இருந்தாலும் மாதம் பல லட்சம் வருமானம் வருகிறது என்பதால், கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரும் வீட்டில் தான் இருப்பார்களாம். அவர்கள் மூன்று பேரும் ரிதன்யாவை மனரீதியாக துன்புறுத்தினார்களாம். இதனால் காரை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ரிதன்யா வாழ்க்கையை முடித்துக் கொண்டார். மேலும் ரிதன்யா கணவர் வீட்டார் கொடுமை குறித்து தனது தந்தைக்கு ஆடியோ பதிவுகளை அனுப்பி இருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கணவர் மாமனார் கைது
இதையடுத்து, ரிதன்யா கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கவின்குமார், ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்தனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சித்ரா தேவியை கைது செய்து சிறையில் அடைக்காமல் இருந்தனர்
ரிதன்யா குடும்பம் கோபம்
இதனால் ரிதன்யா குடும்பத்தினர் கோபம் அடைந்துள்ளனர். தங்கள் மகளின் நிலைக்கு காரணமானவரை கைது செய்யாதது குறித்து வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். ரிதன்யா உடலை பிரேதப்பரிசோதனை செய்யும் வரை, போலீஸார் விசாரணை முறையாக நடத்திய நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி சித்ரா தேவியை விடுவித்துள்ளார்கள் என்றும் இதனை ஏற்க முடியாது என்றும் ரிதன்யாவின் குடும்பத்தினர் கூறினார்கள்.
மாமியார் மீது புகார்
ரிதன்யாவின் குடும்பத்தில் நடந்த விஷயங்கள் அனைத்துக்கும் மூலகாரணமாக இருந்தவர்களுள் ஒருவர் மாமியார் சித்ராதேவி தான் என்றும், ரிதன்யாவின் உடலை பெறும்வரை 3 பேர் கைது என்று சொல்லிவந்த போலீஸார், சடலத்தைப் பெற்றதும் 2 பேரை மட்டும் கைது செய்துவிட்டு, சித்ராதேவியை விடுவித்துள்ளனர். அவரையும் கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் என்றும் அண்ணாதுரை தரப்பு கோரிக்கை வைத்தது.
மாமியார் சித்ராதேவி
இதனிடையே மாமியார் சித்ராதேவி உடல் நிலை காரணமாக அவர் பைண்டிங் ஆர்டர் முறையில் விடுவிக்கப்பட்டு வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டார் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறின. இதனிடையே ரிதன்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தவறு செய்தவர்கள் தப்பிக்கலாமா என்று கேட்டு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சித்ரா தேவிக்கு பாதுகாப்பு
இதனைத் தொடர்ந்து சேவூர் போலீசார் ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சித்ராதேவியை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் அழைத்துச் செல்லும்போது காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த அவரது உறவினர்கள் சித்ராதேவியை புகைப்படம் எடுக்காத வண்ணமும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையிலும் காவல்துறையினருக்கு சவால் விடுக்கும் வகையில் பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சேவூர் காவல் நிலையம்
இந்த காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில், இதை கண்ட நெட்டிசன்கள், சாதாரண பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டால் குற்றம் சாட்டப்பட்ட நபர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ நடத்தப்படும் முறை மிகவும் கொடூரமானதாக இருக்கும் என்றும், வசதி உள்ளவர்கள் காவல் நிலையத்தின் எந்த பகுதியிலும் எப்படியும் செல்ல முடியும் என்ற நிலை இருப்பதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications