திருப்பூரின் சொந்த நிலத்துக்கு பட்டா மாறுதலை கேட்ட நபர்.. அரசு வருவாய்த்துறை அதிகாரிகளே இப்படியா?
திருப்பூர்: தமிழகத்தில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி கொண்டிருக்கின்றன. அரசு துறையில் பொறுப்புள்ள பதவிகளில் உள்ள அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி கைது செய்யப்படுகிறார்கள். இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றம் வரை சென்று சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றமும் உரிய தண்டனைகளை தந்து வருகிறது. எனினும்கூட லஞ்ச புகார்கள் குறையவில்லை. நேற்று ஒரே நாளில் நாகை, திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் அதிகாரிகள் லஞ்சம் கேட்டு சிக்கியிருப்பது, பெருத்த அதிர்ச்சியை தந்து வருகிறது. இதுதொடர்பான விசாரணயையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம் வாங்கி கைதானவர்களின் லிஸ்ட், கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அதில் முதலிடத்தில் வருவாய்த்துறை உள்ளது.. இரண்டாவது இடத்தில் மின்சார வாரியம் இடம்பெற்றுள்ளது..

ஆர்டிஓ ஆபீஸ்
நேற்று திருவள்ளூர் அருகே பைக் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே இந்த விபத்து குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். காரை விடுவித்து திருவள்ளூர் ஆர்டிஓ ஆபீசுக்கு அலுவலகத்திற்கு ஆய்வுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் (53 வயது) என்பவர் கேட்டாராம்.
இதுகுறித்து புகார் பறந்த நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், போலீஸ் நிலையத்தில் டேட்டா ஆபரேட்டராக வேலை செய்யும் சுகுமார் ஆகியோரிடம் லஞ்ச பணத்தை சம்பந்தப்பட்டவர் தந்தபோது, அவர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் புது ரேஷன் கார்டு
அதேபோல நாகப்பட்டினம் மாவட்டத்திலும் ஒருவர் நேற்றைய தினம் கைதானார்.. திருக்குவளை பண்ணை திறவை சேர்ந்தவர் அனுசியா என்பவர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.
இதில் காலதாமதம் ஏற்பட்டதால் அனுசியாவின் சகோதரர் ரமேஷ், இதுகுறித்து தாசில்தார் பாக்கியவதி என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பாக்கியவதி ரூ.1,500 லஞ்சம் கேட்டிருக்கிறார்.. இந்த பணத்தை நேற்று மாலை சென்ற ரமேஷ், தாசில்தார் பாக்கியவதியிடம் தந்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தாசில்தார் பாக்கியவதியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருப்பூரில் சொந்த நிலத்தில்
அதேபோல திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு அதிகாரி நேற்று கைதாகி உள்ளார். பல்லடம் தாலுகா காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி(38) என்பவர் தன்னுடைய அப்பாவின் பெயரிலுள்ள நிலத்தில் தன்னுடைய பெயரை சேர்க்க காட்டூர் விஏஓ ஜெயக்குமாரிடம்(51) விண்ணப்பித்திருக்கிறார்..
இதற்கு 17 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று விஏஓ ஜெயக்குமார் கேட்டாராம்,, அதனை கொடுக்க விரும்பாத ராமமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் அறிவுரைப்படி ஜெயக்குமாருக்கு ரூ.17 ஆயிரம் லஞ்சப்பணத்தை ராமமூர்த்தி தந்தார்.. அந்த பணத்தை ஜெயக்குமார் வாங்கியதுமே, மறைந்திருந்த திருப்பூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்,.
அரசு ஊழியர்கள்
இதே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரமும் மின்வாரியத்தில் ஒருவர் கைதாகியிருந்தார்.. வீட்டிற்கு நிரந்தர மின் இணைப்பு கோரி விண்ணப்பம் அளித்தவரிடம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் 56 வயதான ஜெயகுமார் என்பவர், ரூ.3,000 லஞ்சமாக வேண்டும் என்று கேட்டாராம்.
இதைக்கேட்டு அதிர்ந்த விண்ணப்பதாரர் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் அளிக்கவும், மின்சார வாரிய ஜெயக்குமாரும் கைதாகியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications