உடுமலைப்பேட்டை சங்கீதாவுக்கு என்னாச்சு? ப்ரீத்தியின் பூர்வீக சொத்து எங்கே? திருப்பூரில் விடாத கொடுமை
திருப்பூர்: கொங்கு மண்டலத்தில் நாளுக்கு நாள் வரதட்சணை கொடுமைகள் அதிகரித்தவாறே உள்ளது, பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் உண்டுபண்ணி வருகிறது.. வரதட்சணை கொடுமையால் ரிதன்யா, ப்ரீத்தி, சங்கீதா என இளம்பெண்களின் மரணங்கள் அடுத்தடுத்த கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.. வரதட்சணைக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.. இப்போது என்ன நடந்தது திருப்பூர் மாவட்டத்தில்?
ரிதன்யா மரணம்தான் கடைசி மரணமாக இருக்க வேண்டும், இன்னொரு பெண் வரதட்சணையால் இறக்கக்கூடாது என்று பலரும் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்..

ஆனால், கடந்த வாரம் ப்ரீத்தி என்ற பெண்ணும் தற்கொலை செய்துகொண்டார்.. திருப்பூர் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியில் வரதட்சணை கொடுமையால் பிரீத்தி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பெண்ணின் பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
ப்ரீத்திக்கு கடந்த வருடம் செப்டம்பர் 15ம் தேதி சதீஷ்வர் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.. திருமணத்தின்போது கணவர் குடும்பத்திற்கு 120 சவரன், 25 லட்சம் ரொக்கம், இன்னோவா கார் உள்ளிட்டவை தரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூர்வீக சொத்து
இதனிடையே, பெண்ணின் பூர்வீகச் சொத்து விற்பனையில் வந்த ரூ.50 லட்சத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் ப்ரீத்தியை கொடுமைப்படுத்தி வந்தார்களாம்.. ஒருகட்டத்தில் வரதட்சணை கொடுமை தாங்காமல், கணவர் வீட்டில் இருந்து வெளியேறி, தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார் ப்ரீத்தி.
கடந்த ஒரு மாதமாகவே மன உளைச்சலிலும் ப்ரீத்தி இருந்துள்ளார்.. ஆனால், கடந்த வாரம் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்..
இதனால் நிலைகுலைந்துபோன பெற்றோர், உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசில் புகார் தந்தனர்.. அத்துடன், உரிய நடவடிக்கை இல்லாமல் சடலத்தை பெற மாட்டோம் என்று அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் சொல்லி முறையிட்டு போராட்டம் நடத்தினர்.. இறுதியில்
கமிஷனர் தந்த உறுதிக்கு பிறகே ப்ரீத்தியின் சடலத்தை பெற்று சென்றனர்..
உடுமலை மேஸ்திரி
இதுபோலவே உடுமலையிலும் ஒரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள சோமவாரப்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவருக்கும், கிணத்துக்கடவை சேர்ந்த சங்கீதாவிற்கும், கடந்த, 2018ல் திருமணம் நடந்துள்ளது.. சங்கீதாவுக்காக லட்சக்கணக்கில் சீர்வரிசைகளை அவரது வீட்டில் தந்து திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்.
இப்போது சங்கீதா - ரமேஷ் தம்பதியினருக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், வரதட்சணை சங்கீதாவுக்கும் ஆரம்பமாகியிருக்கிறது.. கூடுதல் பணம், நகை கேட்டு ரமேஷ் அடிக்கடி, சங்கீதாவுடன் சண்டையிட்டு வந்திருக்கிறார்.. ஒருகட்டத்தில் மனம் நொந்துபோன சங்கீதா, கடந்த ஜூலை 14ம் தேதி, விஷம் குடித்து இறந்துபோனார்..
சங்கீதா ஏன் இறந்தார்
இதைக்கேட்டு கதறி அழுத சங்கீதாவின் பெற்றோர், குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், கணவர் ரமேஷ் மற்றும் அவரின் உறவினர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதற்கு போலீசார், தற்போதைக்கு சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்ததுமே, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அதன்படியே கடந்த வாரம், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது.. ஆனால், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் உரிய நடவடிக்கை எடுக்காததோடு, போலீஸ் ஸ்டேஷன் சென்ற சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
கடைசியாக பேசியது
இதனால் ஆவேசமடைந்த உறவினர்கள், உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, தற்போது போராட்டம் நடத்தியுள்ளனர்.. அத்துடன் டிஎஸ்பி நமச்சிவாயத்திடம் இதுகுறித்து புகார் மனுவும் அளித்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதாவின் பெற்றோர், "வரதட்சணை கொடுமையால் ஏற்பட்ட சண்டை காரணமாகவே சங்கீதா உயிரிழந்துள்ளார்; உயிரிழப்புக்கு முன்பு, கணவர்- மனைவி 2 பேருமே செல்போனில் பேசியிருக்கிறார்கள்.. அதனால், கணவர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications