பல்லடம் சுங்கச்சாவடி .. சாதித்த திருப்பூர் மக்கள்.. நிரந்தரமாக இனி கட்டணமில்லை
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் மாதப்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிக்கு கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பு வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் நூற்றுக்கணக்கானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலைக்கு தற்போது கட்டணம் வசூலிப்பதா என மக்கள் கொதிப்படைந்தனர். இதையடுத்து அங்கு நிரந்தரமாக கட்டண விலக்கு மாதாப்பூர் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாதாப்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள மாதப்பூர் பஞ்சாயத்து பகுதி மக்கள், தங்கள் பகுதியினருக்கு ஆதார் அட்டையைக் காண்பித்தால் நிரந்தர கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கோஷமிட்டு நேற்று திடீரென போராட்டத்தை தீவிரப்படுத்தினர். ஏற்கனவே போட்ட சாலைக்கு இப்போது ஏன் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்று கொந்தளித்தனர்.

பேச்சுவார்த்தை
இதனைத் தொடர்ந்து, சுங்கச்சாவடி ஊழியர் செந்தில் மற்றும் மாவட்ட தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
அதன்படி, மாதப்பூர் பஞ்சாயத்து பகுதி பொதுமக்கள் மட்டும், வணிக ரீதியற்ற (Non-commercial) வாகனங்களுக்கு, தங்கள் ஆதார் அட்டையைக் கொண்டு நிரந்தரமாக பதிவு செய்து கொண்டால், எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாகப் பயணிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழி பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். உள்ளூர் மக்களின் கோரிக்கை வெற்றி பெற்றதால் அங்கு பரபரப்பு தணிந்து இயல்பு நிலை திரும்பியது.
பொதுவாக உள்ளூர் மக்களுக்கான சுங்கக் கட்டண நடைமுறை என்ன
பொதுவாக, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு (சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் வசிப்பவர்களுக்கு) சுங்கக் கட்டணத்தில் சலுகைகள் வழங்குவது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) நடைமுறையாகும்.
வணிக நோக்கம் இல்லாத தனிப்பட்ட வாகனங்களுக்கு, மாதாந்திர பாஸ் வசதி குறைந்த கட்டணத்தில் (பெரும்பாலும் ரூ.340 போன்ற சிறிய தொகை) வழங்கப்படுகிறது.
பல்லடம் சிறப்பு என்ன
இந்த பல்லடம் சுங்கச்சாவடி விவகாரத்தில், மாதப்பூர் பஞ்சாயத்து மக்களுக்கு முழுமையான நிரந்தர கட்டண விலக்கு வழங்கப்பட்டுள்ளது, இது உள்ளூர் மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த குறிப்பிடத்தக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது..












Click it and Unblock the Notifications