திருப்பூரில் நடந்த பயங்கரம்.. அடுத்தடுத்து வெடித்து சிதறிய 4 சிலிண்டர்கள்.. தரைமட்டமான 42 வீடுகள்!
திருப்பூர்: திருப்பூரில் அடுத்தடுத்து 4 சிலிண்டர்கள் வெடித்து, வட மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கி இருந்த 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கல்லூரி சாலை எம்.ஜி.ஆர் நகரில் சாயாதேவி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தகர கொட்டகைகளில் வட மாநிலத் தொழிலாளர்கள், பிற மாவட்ட தொழிலாளர்கள் வசித்து வந்தனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள 4 சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

இதனைக்கண்ட தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் அப்பகுதியில் உள்ள 42 தகர கொட்டகைகளும் வெடித்து சிதறி தரைமட்டமாகின. அந்த தகர கொட்டைகளில் அனைத்து பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. இதனையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்து நிகழ்ந்தபோது நல்வாய்ப்பாக அந்த வீடுகளில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அங்கு எரிந்துகொண்டிருந்த தீயை தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திருப்பூரில் சிலிண்டர்கள் வெடித்து 42 தகர கொட்டகைகள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications