தீபாவளி சீட்டுப் பணம் மொத்தமும் போச்சு.. டாடா காட்டிய பாஜக பிரமுகர்.. கதறும் திருப்பூர் மக்கள்
திருப்பூர்: தீபாவளியை முன்னிட்டு ஏலச் சீட்டு நடத்தி 3 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமுறைவான பாஜக பிரமுகரை கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்து தர வேண்டும் என்று திருப்பூரில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியா முழுவதுமே தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். புத்தாடை, இனிப்பு, பட்டாசு, வீட்டிற்குத் தேவையான புதிய பொருள்களை வாங்குவது என்று வீடே களைகட்டி இருக்கும். தீபாவளிக்கு நிறைய செலவுகள் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பலரும் தீபாவளி சீட்டு போடுவது வழக்கம். சிறுக சிறுக சேமித்தால் தீபாவளி பண்டிகையின்போது கணிசமான தொகை கைக்கு வரும். அதை வைத்து அனைத்து செலவுகளையும் செய்யலாம் என்று பொதுமக்கள் சீட்டு போடுவது வழக்கம்.

தீபாவளி ஆஃபர் செய்திகளைப் போல ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சீட்டு மோசடி சம்பவங்களைக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். தனியார் நிறுவனங்களையோ அல்லது தெரிந்த நபர்கள் என்று கருதியோ சீட்டு போடுவதைத் தவிர்க்க வேண்டும். வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களில் ஆர்டி போன்ற சேமிப்புகளைத் தொடங்கலாம் என்று பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்பட்டு வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில், திருப்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச் சீட்டு போட்டிருந்த நிலையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை சீட்டு நடத்தி வந்தவரும், பாஜக பிரமுகருமான நபர் தலைமறைவாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர், ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் கிளை பொறுப்பாளராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் பாஜக கிளை அலுவலகத்தில் வைத்து கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி சீட்டு, மாத ஏலச் சீட்டுகளை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இவரை நம்பி திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தீபாவளி மற்றும் மாத ஏலச் சீட்டுகளைப் போட்டு வந்துள்ளனர்.
அக்டோபர் 20 ஆம் தேதி சீட்டு தொகை முழுவதையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தீபாவளி நெருங்கிவிட்டது, சீட்டு பணமும் கைக்கு வரப் போகிறது என்ற நம்பிக்கையில் மக்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், அவர் இன்று காலை முதல் தலைமறைவாகி உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் பாஜக கிளை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கிளை அலுவலகத்தில் இருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்த பலனும் இல்லாத நிலையில், திருப்பூரில் இருந்து ஈரோடு செல்லக்கூடிய ஊத்துக்குளி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும், காவல் நிலையம் வந்து புகார் அளியுங்கள் என்று போலீஸார் கூறியதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்து வருகின்றனர். பாஜக பிரமுகரான செந்தில்குமார் திருப்பூர் மட்டுமல்லாமல் ஈரோட்டைச் சேர்ந்த பல பகுதிகளிலும் ஏலச் சீட்டு மற்றும் தீபாவளிச் சீட்டு நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், நேற்று முன்தினம் கூட சீட்டு பணத்தைக் கேட்டோம். தருகிறேன் என்று சொன்னார்கள். அதோடு ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதுதான். வாயைக் கட்டி வயிற்றைக கட்டி சம்பாதித்த பணம், சிறுக சிறுக சேர்த்த பணத்தை இப்படி மோசடி செய்துவிட்டார்கள். ஆயிரக்கணக்கிலும், லட்சக் கணக்கிலும் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications