அதிமுக இப்போது வட்டார கட்சி.. நாளைக்கு ஜாதி கட்சி... எடப்பாடி பழனிசாமி மீது டிடிவி தினகரன் அட்டாக்
திருப்பூர்: அதிமுகவை இப்போது வட்டார கட்சியாக மாற்றி வைத்துள்ளனர்.. நாளை ஜாதி கட்சியாக மாற்றிவிடுவர் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடி உள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது: அவசர கதியில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

உதயநிதி ஸ்டாலினை இப்போது அமைச்சராக்கி உள்ளனர்; வரும் காலத்தில் 2 முதல்வர்களை ஒரே வீட்டில் இருந்து கூட அறிவிப்பார்கள். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் என கூறியிருந்தார். இப்போது உதயநிதி அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
திமுகவினருக்கு பதவி கிடைக்காதது குறித்து ஆர்.எஸ். பாரதி பேசியிருந்தார். நாங்கள் எல்லாம் கட்சிக்கு பல தலைமுறைகளாக உழைக்கிறோம்.. ஆனால் புதியதாக வந்தவர்களுக்குதான் முக்கிய பதவிகள் கிடைக்கிறது என ஆர்.எஸ்.பாரதி பேசினார். அவரது மனக்குமுறல் திமுகவில் பலருக்கும் இருக்கிறது. திமுகவில் திடீரென சேர்ந்தவர்கள் எல்லாம் அமைச்சர்களாகின்றனர்.
லோக்சபா தேர்தலுக்கான அமமுக கூட்டணி குறித்து இப்போதைக்கு சொல்ல முடியாது. அடுத்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பரில்தான் கூட்டணி குறித்து அறிவிப்போம். அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸையும் இணைத்து வைத்தவர்கள் யாரோ அவர்கள்தான் இப்போதும் அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்.
அண்ணா திமுகவான 234 தொகுதிகளிலுமே போட்டியிடும் வலிமை கொண்ட கட்சியாக இருந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியும் அவரது ஆதரவாளர்களும் அதை ஒரு வட்டார கட்சி நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர்; இது எதிர்காலத்தில் ஒரு சமூக கட்சியாக- ஜாதிய கட்சியாக மாறும் நிலைமை உள்ளது. இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications