ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள்
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட பொங்கலூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர், போலீசாருடன் அமர்ந்து பேசுவதை வீடியோவாக பதிவு செய்து 'தெறி' திரைப்பட பிஜிஎம் இசையுடன் ரீல்ஸாக வெளியிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தவெக முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தவெகவினர் தேர்தலுக்கு முன்பாக எப்படி ரீல்ஸ்களை தெறிக்க விட்டார்களே அதேபோல, ஆளும் கட்சியான பிறகும் ரீல்ஸ்களை சளைக்காமல் போட்டு வருகிறார்கள். ரீல்ஸ் போட்டு ஆட்சியை பிடித்த கட்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், தவெகவினரின் ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
அமைச்சர்கள் முதல் எம்.எல்.ஏக்கள் வரை பலரும் ஆய்வுக்கு சென்றால் ரீல்ஸ் போடுவதை பார்க்க முடிகிறது. அமைச்சர்களே இப்படி என்றால், கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்லவா வேண்டும்.. விஜய் தலைமைச் செயலகத்தில் மதிய உணவை கேரியரில் வைத்து சாப்பிடுவது போன்ற ஏஐ படங்களை உருவாக்கி பரப்பினர். இப்படி அடுத்தடுத்து தவெகவினரின் அட்ராசிட்டி சமூக வலைத்தளங்களில் பரவி அதிர வைத்தது.

"தெறி" பட பிஜிஎம் போட்டு வீடியோ
எது உண்மை, எது பொய் என தெரியாத அளவுக்கு அடுத்தடுத்து பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்கள் டிரெண்ட் ஆகின. இதற்கு அடுத்ததாக பல இடங்களில் அரசு அதிகாரிகளுக்கு தவெகவினர் ஆலோசனை வழங்குவது போல ரீல்ஸ்களை வெளியிட்டு வந்தனர். குறிப்பாக மருத்துவனையில் திடீர் ஆய்வு செய்வது போன்றும், அம்மா உணவகங்களில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என அவ்வப்போது ஆய்வு செய்து அட்ராசிட்டி செய்வதுடன் அதனை வீடியோவாக எடுத்து ரீல்ஸ் பதிவிட்டு வந்தனர் தவெகவினர்.
தற்போது ஒரு படி மேலே போய், காவல் நிலையத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் பேசுவதை வீடியோவாக எடுத்துக்கொண்டு பின்னர் விஜய் பட பிஜிஎம் மியூசிக்கினை பேக்கிரவுண்டில் எடிட் செய்து ரீல்ஸ் பதிவிட்டுள்ள சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது. தெறி படத்தில் வரும் பிஜிஎமை எடிட் செய்து தவெகவினர் ரீல்ஸ் வெளியிட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலூர் காவல் நிலையத்தில் வீடியோ
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் புதிதாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி பொங்கலூர் காவல்நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் தவெக பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், மாவட்ட செயலாளர் சங்கர் உள்பட தவெகவினரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த தவெக கட்சியினர், காவல்நிலையத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார், மாவட்ட செயலாளர் சங்கர் போலீசாருடன் பேசிக்கொண்டிருந்ததை வீடியோவாக எடுத்துள்ளனர். பின்னர் அந்த வீடியோவை எடிட் செய்து, அதில் காவல்துறை அதிகாரிகளுடன் அமர்ந்து உரையாடுவது போல விஜய்யின் தெறி பிஜிஎம் பின்னணியில் போட்டு சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அட்ராசிட்டி தாங்க முடியவில்லை
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆரவலர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தவெகவினர் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை எனவும், காவல் நிலையத்திற்குள்ளே சென்று எப்படி ரீல்ஸ் வீடியோ எடுத்து பதிவிடுகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இவர்கள் இது போன்று செய்ய விடாமல் எப்படி தடுப்பது என தெரியாமல் போலீசாரும் தவித்து வருவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இப்படி போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட தவெக சட்டமன்ற அலுவலகம் திறக்கப்பட்ட போதும், எம்எல்ஏ நாற்காழியில் அமர்ந்து தவெகவினர் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டு வந்தனர். இதேபோன்று மாநகராட்சி அலுவலங்களுக்கு சென்ற தவெக நிர்வாகிகள் அங்குள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற வீடியோவையும் பதிவு செய்து ரீல்ஸ்-ஆக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications