பாஜக தமிழ்நாட்டில் டெபாசிட் கூட வாங்காத கட்சி என்பதை நிரூபிப்போம்: முதல்வர் மு.க ஸ்டாலின் சூளுரை
திருப்பூர்: தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் கூட வாங்காத கட்சி என்பதை நிரூபிப்போம் என்று காங்கேயகத்தில் நடைபெற்ற திமுக முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். மேலும் மத்தியில் 2-வது முறை ஆட்சி செய்யும் பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வராது எனவும் பேசினார்.
காங்கேயத்தில் மேற்கு மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது மத்தியில் பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வராது எனவும் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை எதுவுமே நிறைவேற்றவில்லை எனவும் கடுமையாக சாடினார். முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் கூட வாங்க முடியாத கட்சி என்பதை நிரூபிப்போம்.

மத்தியில் 2-வது முறை ஆட்சி செய்யும் பாஜக மூன்றாவது முறை ஆட்சிக்கு வராது. கவலையின்றி மக்களை சந்தியுங்கள். யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள். இதுவரை அளித்த வாக்குறுதிகளில் எதையாவது பாஜக நிறைவேற்றி உள்ளதா? சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்ற வாக்குறுதியை கூட பாஜக நிறைவேற்றவில்லை. உழவர்களின் வருமானத்தை இரு மடங்கு ஆக்குவோம் என்று மோடி 2014-ல் சொன்னார். அப்படி எதுவும் நடந்து இருக்கா...இல்லை..
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று வாக்குறுதி அளித்தார் பிரதமர் மோடி..ஆனால் எந்த வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. சொல்லப்போனால் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு இன்மை அதிகரித்துள்ளது. இதைப்போய் நாம கேட்டால் பக்கோடா விற்க போக சொல்கிறார். நம்முடைய இளைஞர்களை..பட்டதாரி இளைஞர்களை பார்த்து போய் பக்கோடா விற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்..
2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் சொந்த வீடு கட்டி தருவேன் என்று பிரதமர் மோடி சொன்னார். சொந்த வீடு இல்லாதவர்களே இப்போது இந்தியாவில் இல்லாமல் ஆக்கிட்டாங்களா.. நீங்களே சொல்லுங்க.. 2024-25 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதார நாடாக மாறும் என்று சொன்னார்கள். நடடந்து என்ன... பணமதிப்பிழப்பு என்று சொல்லி நல்லா இருந்த பொருளாதார்த்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.
பாஜக டிசைன் டிசைன் ஆக அளித்த வாக்குறுதிகள் எல்லாம் பத்திரமாக ஆவணங்களாக உள்ளது. மத்திய அரசு சாதனைகள் எதுவும் செய்யாததால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்பட 40 தொகுதிகளையும் வெற்றி பெற உழைப்போம். நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications