திருப்பூரில் கம்பியால் தாக்கியும் பைனான்ஸ் அதிபர் உயிர் போகலை.. காரை ஏற்றிய ரியல் எஸ்டேட் அதிபர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் பெங்களூருவில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் தனது உறவினரான ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமார் என்பவருடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில் நிலம் வாங்கி வீட்டு மனையாக பிரிப்பது தொடர்பான தகராறில் ஈஸ்வரமூர்த்தியை தீர்த்துக்கட்டியிருக்கிறார் ரியல் எஸ்டேட் பிரமுகர். கம்பியால் தாக்கி உயிர் போகாததால், காரை ஏற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனம் இந்த இரண்டுமே பணம் அதிகம் புழங்கும் தொழிலாக உள்ளது. இதில் திடீரென வரும் லாபம் மற்றும் நஷ்டம் என இரண்டுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். லாபம் வரும் போது உடன் இருப்பவர்களிடையே தகராறு முற்றுகிறது. சில நேரங்களில் விபரீதங்களும் நடக்கிறது. அப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்திக்கு 41 வயது ஆகிறது. இவரது மனைவி பாலாமணி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஈஸ்வரமூர்த்தி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். மேலும் வரக்காளிபாளையத்தை சேர்ந்த உறவினரான ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமார் என்பவருடன் சேர்ந்து கூட்டாக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் முத்தூர், நம்பகவுண்டம்பாளையத்தில், நிலம் வாங்கி வீட்டுமனையாக பிரித்துள்ளார்கள். இதுதொடர்பாக ஈஸ்வரமூர்த்திக்கும் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜ்குமாருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி தீபாவளி முடிந்து நேற்று முன்தினம் இரவு பெங்களூர் செல்ல திட்டமிட்டாராம். அதன்படி வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவில் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் பெங்களூர் செல்ல புறப்பட்டார். பின்னால் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி அமர்ந்து இருந்தார்.
இவர்களது ஸ்கூட்டர், வரக்காளிபாளையத்தை அடுத்த வள்ளியரச்சல் சாலை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது இவர்களது ஸ்கூட்டருக்கு பின்னால் கார் ஒன்று வேகமாக வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார் ஈஸ்வரமூர்த்தி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியிருக்கிறது. இதனால் நிலை குலைந்து தந்தையும், மகனும் கீழே விழுந்தனர். இதில் காயங்களுடன் கிருஷ்ணமூர்த்தி சாலையின் ஓரத்திலும், பலத்த காயங்களுடன் ஈஸ்வரமூர்த்தி நடுரோட்டில் விழுந்தனர்.
அப்போது காரை நிறுத்தி விட்டு, காரில் இருந்து இறங்கி வந்த ராஜ்குமார் 'நீ இன்னும் சாகலையா' என்று கூறி இரும்பு கம்பியால் ஈஸ்வரமூர்த்தியின் தலையில் தாக்கினாராம். இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ராஜ்குமார் "காரை முன்னும், பின்னும் இயக்கி ஈஸ்வரமூர்த்தி மீது ஏற்றினார். ஈஸ்வரமூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவரவும், ராஜ்குமார் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை காட்டிற்குள் வீசி விட்டு, காரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
இதையடுத்து அங்கிருந்தவர்கள் தந்தை, மகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஈஸ்வரமூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினார்கள். கிருஷ்ணமூர்த்தி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கு பயன்படுத்திய காரையும், இரும்பு கம்பியையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜ்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications