திருப்பூர் அருகே பல்லடத்தில் சடலமாக கிடந்த கணவன் மனைவி.. அதிர வைத்த அடுத்த சம்பவம்.. என்ன நடந்தது?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரையில் இரவில் உறங்க சென்ற கணவன், மனைவி காலையில் உயிருடன் இல்லை. பெற்றோர் இருவரும் ஒரே நாளில் தங்களை விட்டு இல்லாமல் போனதால் பிள்ளைகள் இருவரும் பரிதவித்து போனார்கள். கோழி இறைச்சி கடை நடத்தி வரும் சிலம்பரசன் என்பவருக்கும், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தவர் சிலம்பரசன். இவருக்கு வயது 38 வயது ஆகிறது.. இவர் தனது மனைவி அகிலாண்டேஸ்வரி (28), மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வந்தார். நேற்று வழக்கம்போல வேலைகளை முடித்துவிட்டு இரவு வீட்டில் சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினர் ஓய்வெடுத்து கொண்டிருந்தனர். மறுநாள் காலை சிலம்பரசனின் மகள் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்திருக்கிறார். அப்போது சிலம்பரசன் பிணமாக கிடந்துள்ளார். மேலும், அவரது மனைவி அகிலாண்டேஸ்வரியும் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.

அப்பா, அம்மா இருவருமே இறந்து கிடந்ததை கண்டு, சிறுமி அலறினார். அவரது சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது, கணவன், மனைவி இருவருமே பிணமாக கிடந்தனர். அவர்கள் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான போலீசார் உயிரிழந்த நிலையில் இருந்த இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவியை வெட்டிவிட்டு உயிரிழந்தனரா, தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனைவியை வெட்டிவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. பெற்றோர் இருவருமே சடலமாக கிடந்ததை கண்டு பிள்ளைகள் இருவரும் கதறிய காட்சி காண்போரின் நெஞ்சை உலுக்கியது.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தெய்வசிகாமணி (76), மனைவி அலமேலுவுடன் (65), மகன் செந்தில்குமார் (45) ஆகிய மூன்று பேரை மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிய சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கொலையாளிகளை பிடிக்க 14 தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இதுவரையில் யார் கொலை செய்தது என்பது குறித்து தெரியவரவில்லை.. அதற்கு அடுத்த சம்பவமாக பல்லடத்தில் கணவனே மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications