உனக்கு 23-எனக்கு 19..'இனி நாம் சொர்க்கத்தில் வாழலாம்'.. திருப்பூரில் கோவை மாணவரின் கடிதம் சிக்கியது
திருப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருவங்காடு பகுதியை சேர்ந்த தீபக் என்பவர், திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த மீனா என்பவரை காதலித்து வந்தாராம். இவர் மீனாவை வீடு புகுந்து தாக்கிய நிலையில், தான் வாழவே விரும்பவில்லை என்று வாழ்க்கையை முடித்துக் கொண்டார். கடைசியாக அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அதில், நாம் இனி ஒன்றாக வாழ முடியாது; சொர்க்கத்தில் சேர்ந்து வாழலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருவங்காடு பகுதியை சேர்ந்த 19 வயதாகும் தீபக், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மீனா (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி உள்ளார். மீனா கல்லூரி படிப்பை முடித்து, தனது தாயாருடன் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கருமாரம்பாளையத்தில் வசித்து வருகிறார். மேலும் மீனா பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தீபக் தன்னை காதலிக்கும்படி மீனாவை வற்புறுத்தி வந்தாராம். ஆனால் அதற்கு மீனா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த தீபக், நேற்று முன் தினம் மதியம் கருமாரம்பாளையத்தில் உள்ள மீனா வீட்டிற்கு போனாராம். அங்கு மீனா மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது தீபக் மீனா இடையே காதல் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது தீபக் , மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மீனாவின் கழுத்து, வயிறு பகுதியில் சரமாரியாக குத்தினாராம். அவரிடம் இருந்து தப்பிய மீனா வீட்டை விட்டுவெளியே வந்து சத்தம் போட்டிருக்கிறார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து மீனாவை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் மீனாவின் வீட்டுக்குள் சென்றனர். அங்கு மீனாவின் துப்பட்டாவில் தீபக் தூக்கிட்டு உயிரை விட்டுள்ளார்.
மேலும் தீபக் கொண்டு வந்த பையில் கடிதம் இருந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் விசாரித்தனர். அந்த கடிதம் குறித்து போலீசார் கூறுகையில், 'நான் உன்னை திருமணம் செய்து வாழ ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. இனிமேல் இந்த உலகில் நம்மால் ஒன்றாக வாழ முடியாது. இனி நாம் இருவரும் சொர்க்கத்தில் ஒன்றாக வாழலாம்' என்று எழுதப்பட்டு இருந்தது என்றார்கள். தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை, கத்தியால் குத்திய தீபக் உயிரை மாய்த்துக் கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications