"விடமாட்டோம்" அந்த 2 பேரை.. கொந்தளித்த ஹிந்து முன்னணி காடேஸ்வரா.. டக்கென திரும்பிய திமுக
முத்தரசன், செந்தில்குமாருக்கு இந்து முன்னணி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது
திருப்பூர்: தமிழக அரசு ஹிந்துக்களின் குரல்வளையை நசுக்கும் வகையில் செயல்படுவதாக ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது... அத்துடன் 2 முக்கிய நபர்களை கண்டித்து தீர்மானத்தையும் இந்து முன்னணி நிறைவேற்றி உள்ளது.
திமுக இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதாக, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.. அதற்கேற்றார்போல், திமுக மற்றும் கூட்டணிகளின் முக்கிய தலைவர்களின் பேச்சுக்களும் சிலசமயங்களில் சர்ச்சையாகி விடுகின்றன.
அந்தவகையில், சமீபகாலமாக சிக்கி உள்ளவர்கள் தர்மபுரி எம்பி செந்தில்குமாரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனும்.
யூ டூ ப்ரூட்டஸ், ஜெகத் கஸ்பரை விட்டுட்டு.. கனல் கண்ணன் கைதா? நாளை பாருங்க! காடேஸ்வரா விட்ட அறிக்கை!
கிறிஸ்துவ பாதிரியார்
'அரசு விழாவில் இந்து முறைப்படி பூஜைகள் நடக்கக் கூடாது. இப்படி பூஜை செய்ய விதிமுறை உள்ளதா?' என்று செந்தில்குமார் எம்பி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.. 'கடவுள் இல்லை எனக் கூறும் திராவிடர் கழகத்தினர் எங்கே? கிறிஸ்துவ பாதிரியார், முஸ்லிம் இமாம் எங்கே? என்று மிரட்டியதாகவும் செய்திகள் பரபரத்து, இந்துக்களின் கோபத்தை அதிகப்படுத்தியிருந்தது.. ஒருசாரார் இதை எதிர்த்தாலும், மற்றொரு தரப்பினர், செந்தில்குமார் அனைவருக்கும் பொதுவாகத்தானே பேசுகிறார்.. அனைவருக்குமான ஆட்சியாகத்தானே திமுகவை சொல்கிறார் என்று ஆதரவும் தந்தனர்.
அழுக்கு + விநாயகர்
அதுபோலவே முத்தரசன் ஒருவிழாவில் பேசும்போது, கணேசனின் தாயாரான பார்வதியம்மாள் பல மாதங்களாக, பல வருடங்களாக குளிக்கவில்லை. ஒருநாள் கங்கைக்கு குளிக்க போயிருக்கிறார்... குளிக்கும்போது ஏராளமான அழுக்கு வந்திருக்கிறது. அந்த அழுக்கை உருட்டி வைத்திருக்கிறார். அதுதான் விநாயகராகி விட்டது.. குளித்து முடித்த பிறகு அந்த அழுக்கை தண்ணீரில் கரைத்து விட்டிருக்கிறார்... இப்படித்தான் வரலாற்றில் கூறுகிறது.. அதனால், அந்த அழுக்கை போய் நாங்கள் ஏன் கும்பிட வேண்டும்? அந்த அழுக்குக்கு எதற்காக நாங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும்" என்று முத்தரசன் கேட்ட கேள்வி, பாஜக உள்ளிட்ட இந்து ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஹிந்து முன்னணி
இந்நிலையில், இவர்கள் 2 பேரையும் முன்னிறுத்தியும், கண்டித்தும், இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றும் அளவுக்கு சென்றுவிட்டது.. ஹிந்து முன்னணி மாநில செயற்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம், கொடுவாயில் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. அப்போது கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் இவைகள்தான்:
முத்தரசன்
"விநாயகர் சதுர்த்தி விழாவை இழிவுபடுத்திய, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தர்மபுரி எம்பி, செந்தில்குமார் ஆகியோரை கண்டித்து தீர்மானம் இயற்றப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார யாத்திரை மாபெரும் வெற்றியடைந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தின் பல இடங்களிலும் சுமூகமான முறையில் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.
கனல் கண்ணன்
அதேவேளையில், சென்னையில் கடந்த ஜுலை 31-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து கலை இலக்கிய முன்னணி மாநில பொறுப்பாளர் கனல் கண்ணன் பேசியது ஜனநாயக ரீதியான அவரது கருத்தாகும். ஆனால் திமுகவினர் கொடுத்த புகாரின்பேரில் தமிழக அரசு தனிப்படை அமைத்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தது, கருத்து சுதந்திரதத்தை ஒடுக்கி இந்துக்களின் குரல்வளைய நசுக்கும் செயலாகும். ஆகவே, கருத்துரிமையை நசுக்கி ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்வது. இந்து தெய்வங்களை சமூகவலைதளங்களில் இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன...
வக்பு வாரியம்
இந்த கூட்டத்தில், வக்பு வாரியம் குறித்த பேச்சுக்களும் அதிகமாக எதிரொலித்தன.. குறிப்பாக, தமிழகம் முழுவதும் ஹிந்துக்களின் பூர்வீக நிலத்தை அபகரிக்க சதி நடக்கிறது.. வக்பு வாரியம் வாயிலாக தவறான தகவல் அளித்து பத்திரப்பதிவுத்துறையும், தனிநபர் சொத்துகளை பறிக்க உதவுகிறது. கோவில்களுக்கு சொந்தமான நிலத்தையும், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று அறிவித்துள்ளனர்.
குரல்வளை
இத்தகைய செயலால் மத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது... தவறான அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும்.. ஹிந்து தெய்வங்களை இழிவுபடுத்துபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சிறிய காரணத்துக்காக ஹிந்து தேசபக்தர்களை தமிழக அரசு கைது செய்கிறது... கருத்து சுதந்திரத்தை ஒடுக்கி, ஹிந்துக்களின் குரல்வளையை நசுக்கும் வகையில், ஒருதலைபட்சமாக செயல்படும் தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது... ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை பாரபட்சமின்றி மீட்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.