ஆட்டோவில் வலியால் துடித்த கர்ப்பிணி.. பதறாமல் பிரசவம் பார்த்த பெண் போலீஸ்.. குவியும் பாராட்டு!
திருப்பூர்: திருப்பூர் அருகே ஆட்டோவில் வந்த வடமாநில பெண் பிரசவ வலியால் துடித்த போது, பெண் காவலர் ஒருவர் எந்தவித பதற்றமும் இல்லாமல் பிரசவரம் பார்த்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது. காவல்துறையில் சேர்வதற்கு முன்பாக நர்சிங் படித்து பணியாற்றி வந்த காவலர், அந்த அனுபவம் மூலமாக பிரசவம் பார்த்திருப்பது தெரிய வந்துள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி ரிங் ரோடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நேற்றிரவு 11.30 மணியளவில் அந்த வழியாக ஆட்டோ ஒன்று வெகமாக வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆட்டோவில் பெண் ஒருவர் கதறி துடிக்கும் சத்தமும் கேட்டிருக்கிறது.

இதனால் போலீசார் உடனடியாக ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாரதி என்ற இளம்பெண் பிரசவ வலியால் துடித்திருக்கிறார். ஆட்டோவில் அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருப்பது புரிந்திருக்கிறது. ஆனால் அந்த வடமாநில பெண் பாரதி பிரசவ வலியால் கதறி அழுக தொடங்கி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் குழந்தை பாதி வெளியே வந்த நிலையில், உடனடியாக வாகன சோதனை பணியில் இருந்த பெண் போலீஸ் கோகிலா என்பவர், வடமாநில பெண்ணான பாரதிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். மருத்துவமனைக்கு செல்வதற்குள் அந்தப் பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தொடர்ந்து, மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள்கொடியை அகற்றி, இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே வடமாநில பெண்ணிற்கு பிரசவம் பார்த்த காவலர் கோகிலா, நர்சிங் படித்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பெண் காவலர் கோகிலா பேசுகையில், வாகன சோதனையில் ஈடுபட்ட போது எங்கள் பகுதிக்கு வந்த ஆட்டோவில், பெண் ஒருவர் பிரசவ வலியால் துடித்தார். அவர் வடமாநிலப் பெண் என்பதால் குடும்பத்தினர் யாரும் இங்கு இல்லை. உடனடியாக உதவி காவல் ஆய்வாளர் தான் மருத்துவமனைக்கு சென்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்வதாகவும், தன்னை ஆட்டோவில் வருமாறும் தெரிவித்தார்.
ஆட்டோவில் செல்லும்போது, அந்தப் பெண் வலியால் துடித்த நிலையில் பிரசவமானது. நான் ஏற்கெனவே செவிலியர் பயிற்சி முடித்து பணியாற்றிய அனுபவம் எனக்கு இருந்ததால், அவசரத் தேவை ஏற்பட்ட நிலையில் பிரசவத்தை எவ்வித பதட்டமும் இன்றி செய்ய முடிந்தது. மருத்துவமனை வருவதற்குள்ளேயே அந்த பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது.
பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் மூலம் தொப்புள்கொடி அகற்றி இருவரையும் சிகிச்சைக்கு சேர்த்தோம். செவிலியர் பயிற்சி முறைப்படி முடித்து இருந்தாலும், எனக்கு காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் தான் போலீஸாக பணியாற்றி வருகிறேன். அவசரத்துக்கு நான் படித்த கல்வி கை கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications