திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
திருச்சி: திருச்சி நவல்பட்டு எஸ்எஸ்ஐ பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் இன்று அதிகாலை 4 மணிக்கு கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன். இவர் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் சில காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக ஆடுகளுடன் வந்த இரு சக்கர வாகனங்களை நிறுத்தினார். ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாக சென்றனர்.
திருச்சி சிறப்பு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி- முதல்வர் அறிவிப்பு
காவலர்கள்
இதையடுத்து பூமிநாதன் உள்பட காவலர்கள் அவர்களை ஆளுக்கொரு திசையாக துரத்தி பிடிக்க இரு சக்கர வாகனங்களில் சென்றனர். அப்போது திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி அருகில் சென்ற போது பூமிநாதன் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை வளைத்து பிடித்தார்.
சண்டை
இருவர் பிடிபட்டதை அறிந்து கொண்ட மற்றவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை விட்டு விடுமாறு மிரட்டினர். ஆனால் பூமிநாதன் மறுத்துவிட்டார். இதையடுத்து பூமிநாதனிடம் இருந்து அவர்களை மீட்க மற்ற திருடர்கள் சண்டையிட்டுள்ளனர். பதிலுக்கு பூமிநாதன் கடுமையாக போராடினார். இதனால் ஆத்திரமடைந்த திருடர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை சரமாரியாக வெட்டினர்.
சம்பவம்
இதில் சம்பவ இடத்திலேயே பூமிநாதன் துடிதுடித்து இறந்து போனார். இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணிக்கு நடந்திருக்கும். இந்த நிலையில் காலை 5 மணிக்கு அவ்வழியாக சென்றவர்கள் பூமிநாதன் இறந்து கிடந்ததை கண்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் பூமிநாதனின் உடலை மீட்டனர்.
திருடர்கள்
இந்த சம்பவத்தில் பூமிநாதனும் திருடர்களும் பயணித்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றைய தினம் 6 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
இந்த நிலையில் எஸ்எஸ்ஐ கொல்லப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் 10 வயது, 17 வயது சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 4 பேரும்தான் எஸ்எஸ்ஐயை வெட்டிக் கொன்றது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.