"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ்
சென்னை: திருச்சி கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், வருங்காலத்தில் விஜய் தலைமையில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டசபை அமைக்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய், விதிமுறைகளின்படி ஒரு தொகுதியை மட்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், தமக்கு வெற்றியைத் தேடித்தந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் விஜய் இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். தவெக ஆட்சி அமைத்த பின்னர் முதல்முறையாக திருச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கி.மீட்டருக்கு முதலமைச்சர் விஜய் சாலை வலம் மேற்கொண்டார். தொண்டர்கள் வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி மைதான திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார்.
திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அன்னைத் தமிழுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த ஒரு நிமிடத்துக்காக என் வாழ்க்கையில் பல நிமிடங்கள் காத்திருந்தேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களே என்று கூறும் இந்த நொடிக்காகத்தான் பல ஆண்டுகள் நாம் தவமிருந்தோம். அந்த தவம் இன்று நிறைவேறியுள்ளது.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு என்ற குறள் ஒன்று உள்ளது. நீதி நெறி தவறாமல் ஆட்சி நடத்தும் ஆட்சியாளரை மக்கள் தலைவராக இறைவனாக கொண்டாடுவார்கள் என்ற திருக்குறள் நம் முதல்வர் விஜய்க்குப் பொருந்தும். இதே திருச்சியை தங்களுடைய கோட்டை என்று சொன்னவர்களுக்கு எல்லாம் அதை வெறும் மனக்கோட்டை என்று காட்டி மலைக்கோட்டை மாநகரை தளபதியின் கோட்டையாக இன்று மாற்றியிருக்கிறோம்.
சாதாரண நபர்கள், சாதாரண குடும்பத்தினரை எல்லாம் வேட்பாளராக நிற்க வைத்திருக்கிறார். இவர்கள் எல்லாம் நம்மை எதிர்த்து ஜெயித்துவிட முடியுமா என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தார்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த என்னை ஸ்ரீரங்கம் தொகுதியின் சட்டசபை வேட்பாளராக முதல்வர் அறிவித்தார். அறிவித்த உடனேயே திருச்சியின் முதலாளி என்று சொல்லக்கூடிய பல பேர், ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெறுபவர்கள் தான் ஆட்சியமைக்க முடியும் என்று ஏளனமாகப் பார்த்தார்கள்.
இந்த சாமானியனை ஸ்ரீரங்கத்தில் வெற்றி பெற வைத்து ஆட்சியில் முதலமைச்சராக விஜய் அமர்ந்திருக்கிறார். சின்ன பசங்க என்று ஏளனமாகப் பார்க்காதீர்கள் என்று பல மேடையில் பேசியிருக்கிறேன். இந்த சின்ன பசங்க வரும்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டமன்றத்தில் விஜயை முதலமைச்சராக அமரவைப்போம். இது வரும்காலத்தின் வரலாறாக மாறும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications