ஆர்ப்பாட்டமின்றி கொரோனா நிவாரண உதவி... உதவிக்கு எந்நேரமும் அழைக்கலாம் -அன்பில் மகேஷ்
திருச்சி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆர்ப்பாட்டமின்றி, விளம்பரமின்றி கொரோனா நிவாரண உதவிகளை செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஏழை எளியோர் மற்றும் தினக்கூலி பெறுவோர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட பகுதியில் அரிசி, மளிகைப் பொருட்கள் வாங்க சிரமப்படுபவர்களுக்கு அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. வான அன்பில் மகேஷ் நிவாரண உதவிகளை செய்து வருகிறார். மேலும், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.

திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் பகுதியில் கொரோனா நிவாரண உதவிப்பொருட்கள் வழங்க செல்லும் போது தன்னுடன் யாரும் வரவேண்டாம் என்றும், உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்படி சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் கட்சியினருக்கு அட்வைஸ் செய்கிறார். ஆனால் அப்படியிருந்தும் அவர் செல்லக் கூடிய பகுதிகளில் ஆர்வமிகுதியில் ஒரு சில நிர்வாகிகளை தவிர்க்க முடிவதில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி பாலக்கரை பகுதிக்கு சென்ற அவர், முககவசம் அணியாமல் நடமாடியவர்களுக்கு முகக்கவசம் அளித்ததோடு மாஸ்க் அணியாமல் இனி வெளியே வர வேண்டாம் என உரிமையுடன் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே திருச்சி மாவட்டத்தில் அனைத்து பத்திரிகையாளர்களும் தங்களது உடல்நலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை எந்நேரமும் அழைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல் தன்னை பொதுமக்கள் யாரேனும் நேரடியாக அழைத்து உதவி கோரினால், அவர்களின் விவரம் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை தானே சேகரித்து அடுத்த சில மணி நேரங்களில் அரிசி, மளிகை பொருட்களை அனுப்பி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications