தம்பி நீ ஏன் அலையுற... பூரா ஓட்டும் உனக்குத் தான்... அன்பில் மகேஷை நெகிழ வைத்த மூதாட்டி..!
திருச்சி: திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த இரண்டு நாட்களாக கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிர்வாகத்தின் கீழ் மணப்பாறை, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர் ஆகிய 3 தொகுதிகள் வருகின்றன. இந்த மூன்று தொகுதிகளுக்கான பொறுப்பை அன்பில் மகேஷ் ஏற்றிருப்பதால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே தேர்தல் பணிகளை தொடங்கி செய்து வருகிறார்.

இந்நிலையில் தாம் போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்குளம், பனையக்குறிச்சி, குவளக்குடி, கீழமுல்லைக்குடி, உள்ளிட்ட ஊராட்சிகளில் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
அப்போது திருநெடுங்குளம் ஊராட்சியை சேர்ந்த மூதாட்டி ஒருவர், ''தம்பி நீ ஏன் அலையுற, பூரா ஓட்டும் உனக்குத் தான்'' என அன்பில் மகேஷின் கரங்களை பற்றி உரிமையுடன் கூற, அதைக் கேட்டு அவர் நெகிழ்ந்துவிட்டார்.

இதேபோல் குவளக்குடி, கீழமுல்லைக்குடி கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அன்பில் மகேஷுக்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களும், பெண்களும் தடபுடல் வரவேற்பு கொடுத்து அசத்தினர். இதனிடையே திருச்சி பெல் நிறுவன ஊழியர்களிடம் ஓட்டு கேட்டுச் சென்ற அன்பில் மகேஷை, 'இப்போதே வெற்றி பெற்றுவிட்டீர்கள்' என குரல் எழுப்பி மகேஷை தோளில் தூக்கி வைத்து பெல் ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர்.
தனது தொகுதியுடன் கூடுதலாக இரண்டு தொகுதிகளையும் சேர்த்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதலே தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறார் அன்பில் மகேஷ்.












Click it and Unblock the Notifications