தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் இதுதான்!
திருச்சி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நீடிக்கும் வரை பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில்
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: தற்போதைய சூழலில் கொரோனா பிரச்னையில் மட்டுமே தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. தமிழக முதல்வரும் இதற்கே முன்னுரிமை அளித்துப் பணியாற்றி வருகிறாா்.

ஆலோசனை
எனவே, பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது ஆலோசிக்க வேண்டியதில்லை. கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்தால் மட்டுமே பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகளை கொரோனா சிகிச்சைக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்பது குறித்தும் ஆய்வு செய்கிறோம்.

உயர் கல்வி
அந்த வகையில், முசிறியில் நோயாளிகளுக்குப் போதிய படுக்கைகள் கிடைக்காததால் அந்தப் பகுதி பள்ளியில் படுக்கை வசதி செய்து கொள்ளலாம் என அத் தொகுதி எம்எல்ஏவும் பரிந்துரைத்துள்ளாா். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டே உயா்கல்வியில் மாணவா்கள் சேர இயலும்.

வசூல்
எனவே, கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடத்தப்படும். பள்ளிகள் திறக்காத நிலையிலும் கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என சில தனியாா் பள்ளிகள் கட்டாயப்படுத்தி பணம் வசூலிப்பதாகப் புகாா்கள் வருகின்றன.

கல்விக் கட்டணம்
இதுதொடா்பாக, பள்ளிகளுக்கான கல்விக் கட்டண குழுவுக்கு வரப் பெறும் புகாா்களின்பேரில் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தப் புகாா்கள் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications