அறிஞர் அண்ணா யாருக்கு சொந்தம்?.. பிறந்தநாளில் திமுக-அதிமுகவினர் இடையே மோதல்.. பரபர திருச்சி
திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் அவர் யாருக்கு சொந்தம் என்பது போல் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை உருவாக்கியது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவரது பிறந்தநாளை திமுக, அதிமுகவினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் பல இடங்களில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது போட்டோவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திருச்சியில் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை பஸ் நிலையில் அருகே அறிஞர் அண்ணாவின் சிலை உள்ளது. அண்ணாவின் பிறந்தநாள், நினைவு நாள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் அதிமுக, திமுக கட்சியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள். அதன்படி அண்ணாவின் பிறந்தநாளான இன்றும் இருகட்சியினரும் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு இருந்தனர்.

திமுக-அதிமுக வாக்குவாதம்
திமுக சார்பில் அண்ணா சிலை உள்ள பகுதியில் கட்சி கொடிகள், தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை அதிமுகவினர் அங்கு வந்து இரட்டை இலை சின்னத்தை அண்ணாவின் சிலை அருகே வைத்தனர். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக, திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருகட்சியினர் இடையே நடந்த வார்த்தை மோதல் கைக்கலப்பாக மாறும் நிலைக்கு வாய்ப்பு இருந்தது.

போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பும் சமாதானமாக செல்லும்படி போலீசார் கூறினர். இதற்கு திமுக, அதிமுகவினர் ஒகே சொன்னதால் அங்கு மோதல் உருவாகவில்லை. இந்த சம்பவம் இன்று மணப்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து அங்கு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல்வர் துவக்கி வைத்த திட்டம்
முன்னதாக, அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று காலை மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார். மாணவர்களுக்கு காலை உணவை முதல்வர் ஸ்டாலின் பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மேலும் மாணவிகளுக்கு உணவு ஊட்டி முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். தமிழகம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications