மோடிஜி வர்றாரு! ஒரு பொட்டு குப்பை கூட இருக்க கூடாது! மாஸ்க், கிளவுஸுடன் தூய்மை பணியில் அண்ணாமலை
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி திருச்சி விமான நிலையத்தை திறந்து வைக்கும் நிலையில் அங்கு தூய்மை பணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.
திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய முனைய திறப்பு விழா இன்ற நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள திருச்சிக்கு இன்று காலை 10 மணிக்கு வருகிறார் பிரதமர். இதற்காக திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி திருச்சி வரும் நிலையில் திருச்சியை சுத்தம் செய்யும் பணி இன்று காலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றது.
இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: வரும் ஜனவரி 2, 2024 அன்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் வருகையையொட்டி, தமிழ்நாடு பாஜக சார்பாக, ஸ்வச் பாரத் - தூய்மை இந்தியா திட்டத்தினை எதிரொலிக்கும் வண்ணம் காலை 6 முதல் 8 மணி வரையில், திருச்சி மாநகரத்தையும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளையும் சுத்தம் செய்யும் மாபெரும் தூய்மை பணி, நடைபெறவிருக்கிறது.

இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்களும், பொதுமக்களும், கீழ்க்காணும் இணைப்பில் தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து கொள்ளும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அண்ணாமலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார்.
கைகளில் கிளவுஸ் அணிந்து கொண்டு முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வாழை இலைகள், தார்கள் உள்ளிட்ட குப்பைகளை அள்ளினார். அது போல் ஒரு காருக்கு அடியில் இருந்த குப்பைகளையும் குச்சியை விட்டு வெளியே தள்ளி அள்ளினார். அவருடன் 300க்கும் மேற்பட்ட பாஜகவினரும் கலந்து கொண்டனர். மீண்டும் மோடி, வேண்டும் மோடி 2024 என்ற வாசகம் அணிந்த டீசர்ட்டுகளை பாஜக நிர்வாகிகள் சிலர் அணிந்திருந்தனர்.
அப்போது செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அவரிடம் அதி கனமழை வரும் என சொன்னார்கள், எவ்வளவு என சொல்லவில்லை என முதல்வர் ஸ்டாலின் வைரமுத்து கவிதை வெளியீட்டு விழாவில் கூறியது குறித்து கேட்டனர். அதற்கு அண்ணாமலை, மழை நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வடிவேலு போல் பேசி வருகிறார். அரசின் கையாளாகாத தனத்தை மறைப்பதற்கு தொடர்ச்சியாக ஒவ்வொன்றாக சொல்கிறார்கள்.
அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிக்கும் போதே அதை தாண்டியும் மிக மிக கனமழை பெய்யும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் திமுக அரசோ மழைக்காக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி கொடுத்த நிதியை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள்.
எனவே இன்னொரு மழை வந்தாலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வது போன்றோ கடந்த கால மழைகளில் பாடம் கற்றது போன்றோ தெரியவில்லை. சேலம் இளைஞரணி மாநாட்டுக்கு மேயர் கொடுத்த முக்கியத்துவத்தை நெல்லை, குமரியில் உள்ள மேயர்கள் மழைக்கு கொடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் என்ற முறையில் பிரதமர் மோடியை ஓபிஎஸ் வரவேற்க திருச்சி வந்துள்ளார் என எனக்கு தெரியவந்துள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications