பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி வரலியே.. வந்து விழுந்த நிருபர் கேள்வி.. அண்ணாமலை சூடாக பதில்!
திருச்சி: பிரதமர் பெயரை பயன்படுத்தி பக்கத்தில் இருக்கணும்னு நினைக்கிறவங்க தங்களுக்கு தேவையே இல்லை என்றும் பிரதமரை யாருக்கு பிடிக்குமோ அவர்கள் வரவேற்க வந்தால் போதும் எனவும் எடப்பாடி பழனிசாமி குறித்து அண்ணாமலை சூசகமாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியை வரவேற்க வருபவர்களில் பெரிய தலைவர்கள் சின்னத் தலைவர்கள் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும் என மனதார நினைப்பவர்கள் வரவேற்க வந்தால் போதும் எனவும் அவர் கூறியுள்ளார். திருச்சியில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எடப்பாடி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் மோடியை வரவேற்க வரவில்லையே, என்று, பெயரை செய்தியாளர் குறிப்பிட்டு கேள்வி எழுப்பியபோது இவ்வாறு அண்ணாமலை சூடாக பதிலடி கொடுத்தாலும், தனது பேட்டியில் எடப்பாடி பழனிச்சாமி பெயரை அவர் உச்சரிக்கவில்லை.

பிரதமர் மோடியை வரவேற்க வராதவர்களை நினைத்து தாங்கள் வருத்தப்படப் போவது கிடையாது என்றும் அதேபோல் போன் போட்டு வரவேற்க வாங்க என தாங்கள் அழைக்கப் போவதும் கிடையாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். பிரதமர் மோடி கடந்த காலங்களில் எப்போது தமிழ்நாடு வந்தாலும் வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ கட்டாயம் செல்லக் கூடியவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் இன்று திருச்சியில் பட்டமளிப்பு விழா, விமான நிலையத்தின் 2வது முனையம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை வரவேற்க அவர் வரவில்லை. இதன் மூலம் பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்த்தியிருப்பதால் இது அரசியல் களத்தில் பெரியளவில் கவனம் ஈர்த்துள்ளது. இதனிடையே ஒன் இந்தியா தமிழில் ஏற்கனவே கூறியிருந்தபடி, பிரதமர் மோடி திருச்சி வந்து சென்ற பின்னர் அதிமுக மீது பாஜக பாய்ச்சல் காட்ட ஆயத்தமாகிவிட்டது.
இதனிடையே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற சினிமா வசனத்தை போல், எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜகவுக்கும் இடையேயான மோதல் அரசியலை ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் டிடிவி தினகரன் தரப்பும் ரசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications