மகாவிஷ்ணு விவகாரம்! சப்போர்ட்டிற்கு வந்த ஹெச் ராஜா! "இதில் என்ன தப்பு" கண்கள் சிவக்க பரபர பேச்சு
திருச்சி: சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற நபர் பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் பலரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராகக் காட்டமான கருத்துகளைக் கூறி வருகின்றனர். இதற்கிடையே பாஜகவின் ஹெச் ராஜா மகாவிஷ்ணுவுக்கு ஆதரவாக சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்ற நபர் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் முன் ஜென்மம் பாவ புண்ணியம் குறித்தெல்லாம் பேசியுள்ளார். அங்கிருந்த ஒரு ஆசிரியர் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

மகாவிஷ்ணு: இருப்பினும், மகாவிஷ்ணு தனது சர்ச்சை பேச்சைத் தொடர்ந்தார். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பலரும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பந்தப்பட்ட பள்ளிக்கே நேரில் சென்றார். மேலும், அடுத்த சில நாட்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை இடமாற்றமும் செய்யப்பட்டார்.
போலீசாரும் மகாவிஷ்ணுவுக்கு எதிராக விசாரணையில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் ஹெச் ராஜா கருத்து கூறியுள்ளார். மேலும், ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும் என்றும் அதை எதிர்க்கக்கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த போது இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இந்த திராவிட மாடல் என்பவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முதலில் செய்தது என்ன தெரியுமா.. நீதி போதனை வழக்குகளை ரத்து செய்தார்கள். ஆட்டையைப் போட வந்தவர்கள் ஆட்சிக்கு வந்த உடன் அறம் செய்ய விரும்பு எனக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதை அவர்கள் விரும்பவில்லை. இதனால் அவர்கள் அதை நீக்கிவிட்டார்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லக்கூடாது என்கிறார்கள். இதெல்லாம் நான் சொன்னால் சர்ச்சையாகப் பேசுகிறேன் என்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஆன்மீகம் குறித்தும் நீதி போதனை குறித்தும் பள்ளிகளில் சொல்லித் தர வேண்டும். ஈவெரா பற்றி மட்டும் கருணாநிதி பற்றி மட்டும் தான் சொல்லித் தர வேண்டுமா.. எனவே, இதற்கு எதிராக எல்லாம் யாரும் பேசக் கூடாது" என்றார்.
தொடர்ந்து ஆளுநர் விவகாரம் குறித்துப் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சரியில்லை என்று ஆளுநர் கூறியிருந்தார். அது மிகவும் சரியான கருத்து. ஆளுநர் இரண்டு விஷயம் தெளிவாகக் குறிப்பிட்டே பேசியுள்ளார். 10ம் வகுப்பு படிக்கும் மாணவருக்குப் படிக்க வரவில்லை. இதை ஆளுநர் அவராகச் சொல்லவில்லை.. பல சர்வேயில இருந்த விஷயம் தான் இது.
அதேபோல 8ம் வகுப்பு படிக்கும் மாணவரால் 3ம் வகுப்பு கணக்கைக் கூட போட முடியவில்லை. அரசுப் பள்ளிகளில் படித்த சிலர் தனிப்பட்ட முயற்சியால் படித்து ஒரு சிலர் தங்கள் லட்சியத்தை அடைகின்றனர். எனவே, இதை வைத்து அரசுப் பள்ளியின் தரம் சிறப்பாக இருக்கிறது எனச் சொல்ல முடியாது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடும் போது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் அதிகம். ஆனால், தரம் மிக மோசமாக உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications