அதிகாலையில் விராலிமலை அருகே சோகம்! பஸ் ஸ்டாப்பிற்குள் புகுந்த கார்.. 4 பேர் பலி! ஒருவர் படுகாயம்!
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இன்று காலை கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த 5 பேர் வாடகை காரில் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். திருச்சி விராலிமலை பகுதியை அடுத்த லஞ்ச மேடு சாலையில் கார் இன்று காலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அரச மர பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரத்தில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் கார் மோதியது.

இன்று காலை 6.25 மணியளவில் கார் விபத்துக்கு உள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதில் முருகன் என்பவரது மகன் ரவிக்குமார் உயிரிழந்தது காரில் இருந்த ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது. உயிரிழந்த மற்ற 3 பேர் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
படுகாயமடைந்த ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுய நினைவு இல்லாததால் உயிரிழந்த மற்றவர்கள் குறித்து விவரம் தெரியவரவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விராலிமலை அருகே சாலை விபத்தில் இன்று விடியற்காலையில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications