அடிதூள்.. திருச்சிக்கு புதிய அடையாளம்! சென்னை கத்திப்பாரா போல் வருகிறது உயர்மட்ட பாலம் - எந்த இடம்?
திருச்சி: சென்னையின் நவீன அடையாளங்களில் ஒன்றாக திகழும் கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தைபோல் திருச்சியிலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க 2.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. எந்த இடத்தில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படுகிறது? இதனால் என்ன பயன்? விரிவாக பார்ப்போம்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து இருக்கும் பஞ்சப்பூர் பகுதியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கி துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் சரக்கு வாகனங்களுக்கான முனையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அருகிலேயே ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள் சந்தை அமைக்கப்படுகிறது.

அது அல்லாமல் அருகிலேயே டைடல் பார்க், 2000 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், மெட்ரோ ரயில் நிலையம், சர்வதேச தரம் கொண்ட ஒலிம்பிக் நகரம், விளையாட்டு மைதானம், பல்நோக்கு வணிக வளாகம் உள்ளிட்ட திட்டங்களையும் அரசு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதன் மூலம் திருச்சியின் துணை நகரமாக பஞ்சப்பூர் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மக்கள் இப்பகுதிக்கு வந்து செல்லும் வகையில் பஞ்சப்பூரில் இருந்து ஆற்று கரைகள் வழியாக கரூர் பைபாஸ் சாலையுடன் இணைக்கும் விதமாக புதிய சாலையை ரூ.320 கோடி மதிப்பில் அமைக்க உத்தரவிட்டப்பட்டு, அரசு ஒப்புதலுக்காக அறிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
புதிய பேருந்து முனையத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க உயர்மட்ட மேம்பாலத்தை அமைக்க அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறாராம். சென்னையின் அடையாளமாக திகழும் கிண்டி கத்திப்பாரா பாலத்தைபோல் அமைக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதான் திருச்சி மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கோரையாறு மேம்பாலத்தில் இருந்து பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம் வழியே செங்குறிச்சி சாலை வரை 2.6 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் இந்த புதிய உயர்மட்ட பாலம் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, திருச்சி - புதுக்கோட்டை ரிங் ரோடு, திருச்சி - திண்டுக்கல் ரிங் ரோடு, பஞ்சாப்பூர் - எடமலைப்பட்டி புதூர் சாலையுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அத்துடன் பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையம், சரக்கு வாகன முனையம், கல்லூரிகளை இணைக்கும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவிக்கையில், "மாநகராட்சி சார்பில் 2.6 கிலோ மீட்டருக்கு உயர்மட்ட பாலம் அமைக்க பரிந்துரை செய்து இருக்கிறோம். தேசிய நெடுஞ்சாலைத்துறை இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது." என்றார்.
இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுவதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறி இருக்கும் தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குநர் கணேஷ்குமார், ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பாலத்தின் இறுதி வடிவம் மற்றும் தொலைவு போன்றவரை உறுதிபடுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications