திருச்சியிலிருந்து வந்த போன் கால்! கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! சொந்தக்கட்சிகாரர்கள் மீதே அதிரடி!
சொந்தக்கட்சிகாரர்கள் மீதே ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை.
திருச்சி: திருச்சியில் நிகழ்ந்த எதிர்பாராத உட்கட்சி மோதல் நிகழ்வால் கோபத்தில் கண் சிவந்த முதலமைச்சர் ஸ்டாலின், சொந்தக் கட்சிக்காரர்கள் மீதே அதிரடி ஆக்ஷன் எடுத்திருக்கிறார்.
அமைச்சர் நேருவுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் என்ற போதிலும் பாரபட்சம் காட்ட வேண்டாம் எனக் கூறி காவல்துறை நடவடிக்கைக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.
இதன் மூலம் இனி அதிரடி நடவடிக்கைகளுக்கு தயங்கமாட்டேன் என்பதை அமைச்சர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் மிக தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஆட்சிக்கட்டில்
கடந்த 10 ஆண்டுகாலம் மிக கடுமையாக போராடி ஊர் ஊராக மக்களை சந்தித்து, பேய் போல் உழைத்து திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்திருக்கிறார் ஸ்டாலின். இந்தச் சூழலில் ஒரு சில அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய நிலை உருவாகியுள்ளது. அண்மையில் கூட மத்தளத்திற்கு 2 பக்கமும் இடி என்பது போல் தனது நிலை உள்ளதாக நிர்வாகிகள் மத்தியில் உருக்கமுடன் பேசினார் முதல்வர்.

அனல் பறக்கும் உத்தரவு
அதற்கு பிறகு பெரும்பாலான அமைச்சர்களின் நடவடிக்கைகளில், அணுகுமுறைகளில் மாற்றம் தென் படத்தொடங்கியது. இந்நிலையில் திருச்சி சிவா ஆதரவாளர்களும், அமைச்சர் நேரு ஆதரவாளர்களும் ஒன்றுக்கும் ஆகாத விஷயத்திற்கு அடித்துக் கொண்டு மல்லுக்கு நின்றது முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்ல காவல் நிலையத்திற்குள் நிகழ்ந்த மோதல் குறித்து திருச்சியிலிருந்து வந்த போன் காலால், கோபத்தில் கண் சிவந்த முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த நிமிடமே அறிவாலயத்துக்கு அனல் பறக்கும் உத்தரவு ஒன்றை போட்டார்.

4 பேர் மீது நடவடிக்கை
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடமும் இது குறித்து பேசி உடனடியாக ஆக்ஷன் எடுக்க அறிவுறுத்தினார். அடுத்த சில மணி நேரங்களில் அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் ஆகியோரை திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்ததோடு காவல்துறை நடவடிக்கைக்கும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். சொந்தக்கட்சிக்காரர்கள், அமைச்சர் நேரு கோபித்துக்கொள்வார் என்பது பற்றியெல்லாம் ஸ்டாலின் கவலை கொள்ளவில்லை.

ஆக்ஷன் தொடரும்
தாம் எடுத்த முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்தி திமுகவினருக்கும், அமைச்சர்களுக்கும் இதன் மூலம் ஒரு பெரிய பாடம் கற்பித்திருக்கிறார். அதாவது முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் ஆதரவாளர்களுக்கே இந்த நிலை என்றால், இனி வரும் நாட்களில் தனது அதிரடி ஆக்ஷன் பாரபட்சமின்றி பாயும் என்பதை அவர் உணர்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications