ஜூன் 15ல் கல்லணையில் இருந்து நீர் திறப்பு.. டெல்டா விவசாயிகளை குளிர்விக்கும் முதல்வர் ஸ்டாலின்!
திருச்சி: ஜூன் 15 ஆம் தேதி கல்லணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். நேற்று மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் ஜூன் 15ல் கல்லணையை வந்தடைகிறது.
காவிரி ஆறு, தமிழக விவசாயிகளின் உயிர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி ஆற்றில் வந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் மூலமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர் என தமிழகத்தின் 12 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதி பயனடைந்து வருகின்றன. 12 மாவட்டங்களும் சமவெளிப் பகுதியாக உள்ளதால் வேறு மிகப்பெரிய அணைகள் எதுவும் இன்றி மேட்டூர் அணையை நம்பியே இருக்கும் சூழல் உள்ளது.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பதால் வழக்கம் போல சரியான நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சேலத்தில் சுற்றுப் பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் நேற்று நீர் திறந்து வைத்தார். 8 கண் மதகுகள் வழியாக பெருகிப் பாய்ந்த நீரை மலர் தூவி வரவேற்றார்.
மேட்டூரில் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மாயனூர் கதவணை, மேலணை கடந்து ஜூன் 15ஆம் தேதி கல்லணை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, ஜூன் 15ஆம் தேதி கல்லணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
வரும் 15ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தஞ்சை வரவுள்ள நிலையில், கல்லணையில் நீரை திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தஞ்சை வரும் சூழலில் கல்லணையில் அவரே தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கட்சியினர், டெல்டா மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கல்லணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுவதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. கல்லணையில் நீரை திறந்து வைத்து மலர் தூவி காவிரி ஆற்று நீர் டெல்டா மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சிப்படுத்துவதை நேரில் காணவுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications