தலைகீழாக மாற்றம் காணும் திருச்சி.. வருகிறது மெகா மெட்ரோ.. சமயபுரம் டூ பஞ்சாப்பூர் வரை அடியோட மாறுதே
திருச்சி: தமிழ்நாட்டில் சென்னை போலவே மற்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை உருவாக்குவது குறித்து திட்டமிடப்பட்டு வந்த நிலையில், தற்போது திருச்சியில் இதற்கான சாத்திய கூறு கொண்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சென்னையின் போக்குவரத்து பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள், புதிய சாலைகளை கட்டுவதைவிட பொது போக்குவரத்தை அதிகரிப்பதுதான் நல்ல பலனை கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக ரயில் இயக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே பயணிகளின் எண்ணிக்கையும், அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக விழா நாட்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கினர். இப்படியாக மெட்ரோ ரயில் சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த சேவையை மேலும் சில மாவட்டங்களுக்கு நீடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
அதனை சாத்தியப்படுத்த கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. இதற்காக கோவைக்கு ரூ.9,000 கோடியும், மதுரைக்கு ரூ.8,500 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கடந்த ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். மேலும் சேலம் மற்றும் திருச்சி நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து சேலத்தில் 40 கி.மீ தொலைவுக்கும், திருச்சியில் 45 கி.மீ தொலைவுக்கும் மெட்ரோ அமைக்க வாய்ப்பிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (சி.எம்ஆர்எல்)கூறியிருந்தது. இதனையடுத்து எந்தெந்த பகுதியில் மெட்ரோ அமைப்பது என்பது குறித்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சேலத்தில் 4 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதாவது சமயபுரம் முதல் வயலூர் சாலை, துவாக்குடி முதல் பஞ்சாப்பூர் வரையிலான இடங்களில் மெட்ரோ ரயில் அமைக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த பகுதியில் இதற்கான கள ஆய்வை சிஎம்ஆர்எல் மேற்கொண்டு வருகிறது. அதேபோல திருச்சி மாநகரில் 5 கி.மீக்கு மேம்பாலம் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, அதற்கான விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்) தயாரிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஆனால் இதில் ஒரு சிக்கல் மேலெழுந்துள்ளது. அதாவது, மெட்ரோ பணிகள் தொடங்க உள்ள பகுதியில்தான் நெடுஞ்சாலை துறையும் மேம்பாலங்களை அமைக்க இருக்கிறது. எனவே இரு துறையும் ஒன்று சேர்ந்து இந்த பணிகளை எப்படி செய்வது என்பது குறித்த கலந்தாலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
எனவே விரைவில் இரண்டு துறையும் சேர்ந்து ஓர் கூட்டு திட்ட அறிக்கையை தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சமயத்தில் நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ ரயில் பாதை ஆகியவை அமைய உள்ளதால் மாநகரின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications