மக்களே உஷார்! காவிரியாற்றில் முதலை நடமாட்டம்! இறைச்சிகளை ஆற்றில் வீச வேண்டாம்! வனத்துறை எச்சரிக்கை!
திருச்சி: திருச்சி காவிரியாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால், தேவையின்றி யாரும் ஆற்றுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதுமட்டுமல்ல காவிரியாற்றில் மீன் பிடிப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இறைச்சிகளை ஆற்றில் வீச வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காவிரியாற்று படித்துறைகளில் முதலைகள் நடமாட்டம் தெரிந்தால் அதனை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி காவிரியாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாகவும், அடிக்கடி கரை ஒதுங்குவதாகவும், அதை பாதுகாப்பாக பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விடவேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. மேலும், இது தொடா்பான காணொலி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமார் உத்தரவின்பேரில், மாவட்ட வன அலுவலா் கிரண், மற்றும் அலுவலா்கள் முதலை நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்கு பின்னா் மாவட்ட வன அலுவலர் கிரண் செய்தியாளா்களிடம் கூறியதாவது; ''காவிரி ஆற்றின் மையப்பகுதியில் தான் முதலை உள்ளது. அங்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம். மேலசிந்தாமணி பகுதி காவிரி ஆற்றில் சிலா் மீன் பிடிப்பதாக தெரிகிறது. எனவே, மீன்பிடிப்பவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ''
''மேலும் கரையோரம் வசிக்கும் மக்கள் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, மற்றும் மீந்துபோன உணவுகளை ஆற்றில் வீச வேண்டாம். அவ்வாறு வீசினால், உணவு கிடப்பதை முதலை மோப்பம் பிடித்து கரையேறி வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதலையை கண்காணித்து வருகிறோம். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், படித்துறைகளில் நடமாடினால் முதலையை பிடித்து வேறு இடத்தில் விட நடவடிக்கை எடுக்கப்படும்.'' இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே முக்கொம்பு காவிரியாற்றில் முதலைகள் நடமாட்டம் இருப்பதை ஏற்கனவே திருச்சி மக்கள் அறிவர். இப்போது என்னவென்றால் திருச்சி காவிரியாற்று பகுதியிலேயே முதலைகள் நடமாட்டம் இருப்பதாக வெளியாகும் தகவல் தான் திருச்சி மக்களுக்கு புதிதாக உள்ளது.












Click it and Unblock the Notifications