16 வயசு சினேகா.. மண்வெட்டியால் அடித்தே கொன்ற குடிகார செல்வராஜ்.. மணப்பாறையில் சோகம்
மகளை மண்வெட்டியால் அடித்தே கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார்
திருச்சி: "என் பொண்ணை மண்வெட்டியாலேயே அடிச்சு கொன்னுட்டாரு.. என் புருஷனை கைது பண்ணுங்க" என்று பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு 38 வயதாகிறது. கூலி தொழிலாளி. இவரது மகள் 16 வயது சினேகா. அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
செல்வராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்திருக்கிறது. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தாலே தினமும் சண்டையும், தகராறும்தான்.
இப்படித்தான் நேற்றுமுன்தினம் சண்டை வர.. மனைவியை செல்வராஜ் போட்டு சரமாரியாக தாக்கி உள்ளார்.. இதனால் பதறி போன சினேகா, அம்மாவை ஏன்ப்பா அடிக்கிறீங்க என்று கேட்டுள்ளதார். இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், மகள் என்றும் பாராமல் சினேகாவை மண்வெட்டியால் தாக்கி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சினேகா தூக்குப் போட்ட நிலையில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். மகள் தூக்கில் தொங்குவதை கண்டு தாய் அலறி துடித்தார். தகவலறிந்து மணப்பாறை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை ஆரம்பித்தனர்.
தந்தை குடித்து விட்டு தகராறு செய்ததால் மனசு உடைஞ்சு சினேகா தற்கொலை செய்தாரா? அல்லது செல்வராஜ் மண்வெட்டியால் தாக்கி சினேகா இறந்தாரா? அதனை மறைக்க செல்வராஜே தூக்கில் உடலை தொங்கவிட்டாரா என்ற பல கோணங்களில் விசாரணை துவங்கப்பட்டது.
இதனிடையே சினேகாவின் அம்மா, மகளின் தற்கொலைக்கு காரணம் கணவன் தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி புகார் அளித்தார். இதையடுத்து, மகளை தற்கொலைக்கு தூண்டியதாக செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.