விரைவில் தலைகள் சிதறும்..கொம்பன் ஜெகன்..! திருச்சி எஸ்பிக்கு கொலை மிரட்டல்..கடைசியில் நடந்த ட்விஸ்ட்
திருச்சி: திருச்சியில் பிரபல ரவுடியாக வலம் வந்த கொம்பன் ஜெகன் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி எஸ்பி வருண்குமாருக்கு கொம்பன் பிரதர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் ஐடியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பனைக்குறிச்சியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். கொம்பன் ஜெகன் என்ற பட்டப் பெயருடன் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தார்.

பள்ளி படிப்பை முடித்து பிஇ படிப்பதற்கு கல்லூரியில் சேர்ந்த அவர் நண்பர்களுக்கு இடையேயான பிரச்சனையில் அடிதடி ஆகி பின்பு குற்றப் பின்னணி கொண்ட நபராக மாறி இருக்கிறார். 2012ஆம் ஆண்டில் ஒரு கொள்ளை வழக்கு இவர் மீது முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொலை முயற்சி, கொள்ளை, கொலை மிரட்டல் என 2012 ஆம் ஆண்டிலிருந்து 2023 வருடங்களுக்குள் திருச்சி மதுரை கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு ஏ ப்ளஸ் குற்றவாளியாக காவல் துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டார். மேலும் 2014, 2015 உள்ளிட்ட வருடங்களில் சக்திவேல், சசி ஆகியோர் செய்யப்பட்ட வழக்கிலும் கல்லூரி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் கைது செய்யப்பட்டார்.
கொம்பன் ஜெகன் என்கவுண்டர்.. காத்திரு போலீஸ் மிக விரைவில் வருவோம்.. திருச்சி எஸ்பி படத்துடன் மிரட்டல்
திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் அதற்கு பிறகு பூந்தமல்லி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு பிரபல ரவுடிகளுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னாளில் பெரிய அளவிலான நபராக மாறினார். தொடர்ந்து சிறையில் இருந்து வெளிவந்த அவர் ஆர்த்தி என்ற இளம் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு எந்த குற்ற செயலிலும் ஈடுபட மாட்டேன் என காவல்துறையில் எழுதிக் கொடுத்துவிட்டு ஜெகன் சில காலம் எந்த சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி போலீஸ் என்கவுண்டரில் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டார் . சனமங்கலம் காட்டுப்பகுதியில் துப்பாக்கிகளுடன் சிலர் வழிப்பறி செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததாகவும் அப்போது அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் கருணாகரன் சப் இன்ஸ்பெக்டர் வினோத் உள்ளிட்டோர் ஜெகனை பிடிக்க முயன்றபோது அரிவாளால் கொம்பன் ஜெகன் காவல்துறையினரை நோக்கி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாக கருணாகரன் தனது துப்பாக்கியால் ஜெகனை சுட்டு தற்காப்புக்காக என்கவுண்டர் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு ஜெகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், கொம்பன் பிரதர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் கொம்பன் ஜெகனின் ஆதரவாளர்கள் சிலர் வீடியோக்களை பதிவேற்றி வந்துள்ளனர். சில வீடியோக்கள் காவல்துறையினரை மிரட்டும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு வீடியோவில் 'வெயிட்டிங் ஃபார் ரெட் அலர்ட்' என்றும் சம்பவங்கள் தொடரும் என திருச்சி எஸ் பியான வருண்குமாரின் புகைப்படத்துடன் விரைவில் தலைகள் சிதறும் என்றும், மற்றொரு வீடியோவில் 'காத்திருடா போலீஸ் மிக விரைவில் வருவோம் டா' என்றும் பதிவிட்டனர்
போலீஸ் என்கவுண்டரில் கொம்பன் ஜெகன் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசாரை மிரட்டும் வகையில் மிரட்டல் வீடியோக்கள் வெளியானது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சி சைபர் கிரைம் போலீசார் மற்றும் சோசியல் மீடியா செல் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கொம்பன் ஜெகன் பிரதர்ஸ் என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளியிட்டது 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவன் மீது பத்தலை காவல் நிலையத்தில் ஐபிசி 153(В), 505(2) IPC r/w 66(D) தகவல் தொழில்நுட்ப சட்டம் 21, ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
முதல் சிறுவர் 16 வயதுக்கு உட்பட்டவன் என்பதால் சமூக வலைதளங்களை இனிமேல் கவனமாக கையாள வேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பினர். மேலும் மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில் கொலை மிரட்டல் விடுத்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை அழைத்த எஸ்பி அருண்குமார் இருவருக்கும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். மேலும் சமூக வலைதளங்களில் பல விஷயங்கள் இருக்கும்போது இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.. நன்கு படித்து முன்னேற வேண்டும் என சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய எஸ்பி வருண்குமார் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் காவல்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications