திருச்சியில் ஷாக்.. போலீசாருக்கு பணம் பட்டுவாடா.. இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்
திருச்சி: திருச்சி மேற்குத் தொகுதி வேட்பாளா் ஒருவா், தொகுதிக்குள்பட்ட, தில்லைநகர் உள்பட 6 காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை பணம் விநியோகித்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்புடைய தில்லைநகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், நிலைய எழுத்தர்கள் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில், சட்டசபை தோ்தலுக்கான தபால் வாக்களிக்கும் நிகழ்வு தோ்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், காவலா்கள், ஆசிரியா்கள், முதியவா்கள், மாற்றுத்திறத்திறனாளிகள் சனிக்கிழமை முதல் தங்களது தபால் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.

6 போலீஸ் ஸ்டேசன்
தபால் வாக்குகளை கவருவதற்காக திருச்சி மேற்கு தொகுதியில் வேட்பாளர் ஒருவர் சார்பில், , தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட் ஆகிய, 6 காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை, அவர்கள் 'தகுதிக்கேற்ப' 90க்கும் மேற்பட்ட கவர்களில் பணம் உள்ளே வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையர் சோதனை
இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.1½ லட்சம் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தில்லைநகர்
இதையடுத்து திருச்சி தில்லைநகர் மற்றும் அரசு மருத்துவமனை காவல் நிலையங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்
தில்லைநகர் காவல் நிலைய தலைமை காவலர் சுகந்தி அரசு மருத்துவமனை காவல்நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி ஆகியோர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணையில் உறுதி
தில்லைநகர், உறையூர் காவல்நிலைய எழுத்தர்களை (ரைட்டர்) அழைத்து, காவல்துறை உதவி ஆணையர் வீரமுத்துவும் நடத்திய விசாரணையில் கவர்களில் தலா ரூ.2000 வீதம் வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

4 பேர் இடைநீக்கம்
இதையடுத்து பணம் பட்டுவாடா விவகாரம் தொடர்புடைய தில்லைநகர் காவல் ஆய்வாளர் சிவக்குமார், நிலைய எழுத்தர்கள் பாலாஜி உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை ஆணையர் லோகநாதன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த போலீசார் நீக்கம் மற்றும் நடவடிக்கை போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications