ஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்... திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் உயரப்பறக்கும் திமுக கொடி..!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வெற்றிமுகத்தில் உள்ளது.
திமுகவின் கோட்டை திருச்சி மாவட்டம் என்பதை அக்கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த சட்டமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இதனிடையே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கடின உழைப்பும் இந்த வெற்றிக்கு அடித்தளமாக உள்ளது.
5 மாநிலங்களில் 3இல் மீண்டும் ஆளும் கட்சியே வெல்ல வாய்ப்பு... மக்களின் தீர்ப்பு கூறுவது என்ன
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்டத்தை பற்றி கருணாநிதி குறிப்பிடுகையில் ''தீரர்களின் கோட்டம்'' என்றுக் கூறுவார். திமுகவுக்கு திருப்புமுனைகளை ஏற்படுத்திக் கொடுத்த பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன. அந்தவகையில் இந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் திருச்சி சிறுகனூரில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட மாநாடு திமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
எந்தெந்த தொகுதிகள்
லால்குடி, துறையூர், மண்ணச்சநல்லூர், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை, ஸ்ரீரங்கம், முசிறி, என திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றிமுகத்தில் இருக்கிறார்கள். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத வகையில் வலிமையான வேட்பாளர்களை திருச்சி மாவட்டத்தில் திமுக தலைமை களமிறக்கியிருந்தது.
கடின உழைப்பு
இதனிடையே, மணப்பாறை தொகுதியை பற்றி கூற வேண்டும் என்றால் அது தொடர்ந்து அதிமுக வசமே இருந்து வந்தது. 1996-ல் ஒரேயொரு முறை மட்டுமே அங்கு திமுக வெற்றி பெற்றது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவிடம் இருந்து மணப்பாறை தொகுதி திமுக வசம் செல்வதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.
இனிகோ இருதயராஜ்
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை விட பல்லாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ். இதேபோல் திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், திருச்சி மேற்கில் கே.என்.நேரு. என திமுக வேட்பாளர்கள் அனைவரும் விறுவிறுவென லீடிங்கில் சென்றுகொண்டிருக்கிறார்கள்.