“முதல்வர் மனம் சங்கடப்படக்கூடாது”.. அடித்துப் பிடித்து ஓடிய கேஎன் நேரு.. சமாதானம் ஆன திருச்சி சிவா!
திமுக எம்.பி. திருச்சி சிவாவை நேரில் சந்தித்து சமாதானம் செய்தார் அமைச்சர் கே.என்.நேரு.
திருச்சி : "நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல்வர் மனம் சங்கடப்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்" என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சி சிவா இல்லம் கே.என்.நேரு ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென, திருச்சி சிவாவின் வீட்டுக்கே நேரில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவாவை அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு பேசிய நிலையில் இரு தரப்பினரும் சமாதானமடைந்தனர்.

திமுக கோஷ்டி மோதல்
திருச்சியில் இறகுப்பந்து விளையாட்டு மைதான திறப்பு விழா அழைப்பிதழில் திமுக ராஜ்யசபா எம்.பி திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறாததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி காட்டினர். இதனையடுத்து அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திமுக எம்.பி திருச்சி சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாக்குதல்
அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்பு கொடி காட்டியதாக திருச்சி சிவா ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்குள் புகுந்து கே.என்.நேரு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு காரணமான 4 பேர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமான ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி சிவா வேதனை
இதற்கிடையே, பஹ்ரைன் சுற்றுப்பணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய எம்.பி திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தபோது, தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்றும் எதையும் பேசும் மனநிலையில் தான் இல்லை என்றார். மேலும், தனி மனிதனை விட இயக்கம் பெரிது.. கட்சி பெரிது என்று எண்ணுபவன் நான். கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

வீட்டுக்கே போன அமைச்சர் நேரு
இந்தச் சம்பவத்தால் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மிகவும் அதிருப்தியடைந்து, அமைச்சர் கே.என்.நேருவிடம் பேசியுள்ளார். திருச்சி சிவாவை நேரில் சந்தித்துப் பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து இன்று மாலை திருச்சி சிவாவை அவரது வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி சிவாவிடம் இந்தச் சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பு இல்லை என விளக்கினார்.

முதல்வர் மனம் சங்கடப்பட்டு விடக்கூடாது
பின்னர் இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய திருச்சி சிவா, "நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லதாக இருக்க வேண்டும் என்ற தலைவர் கருணாநிதியின் குரல் எங்கள் செவியில் எதிரொலித்து கொண்டிருக்கிறது. கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மிகுந்த பொறுப்புடன் இந்த ஆட்சியை மிகுந்த பொறுப்புடன் நடத்தி வரும் சூழலில் அவருடைய மனம் சங்கடப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் உள்ளோம். அவர் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியின்படி அமைச்சர் நேரு என்னைச் சந்தித்தார்.

எந்த சம்பந்தமும் இல்லை என்றார்
நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அண்ணன் கே.என்.நேரு சொன்னார்; நான் கேட்டுக்கொண்டேன். எங்களைப் பொறுத்தவரை இயக்கத்தின் வளர்ச்சியே முக்கியம், அவர் ஆற்றும் தொண்டை நான் ஆற்றுவதா என்றால் அது முடியாது, நான் ஆற்றும் பணிகளை அவர்கள் வரவேற்கிறார்கள். ஆக, இப்படி பலதரப்பட்டவர்கள் பணியாற்றும் கழகத்தில் கழகத்தின் வளர்ச்சியே எங்கள் பணி. நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications