அரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..!
திருச்சி: திருச்சியில் அரசுப் பேருந்தை மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் இருந்து திருச்சிக்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்தை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துநரும் மதிய உணவுக்காக ஹோட்டலுக்கு சென்றிருக்கின்றனர்.

இதனை நோட்டமிட்ட போதை ஆசாமி, கண்ணிமைக்கும் நேரத்தில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை ஸ்டார்ட் செய்து ஓட்டிக்கொண்டு சென்றார். பட்டப்பகலில் திருச்சி பேருந்துநிலையத்தில் நிகழ்ந்த இந்த நிகழ்வு போக்குவரத்து கழக ஊழியர்களை அதிர்ச்சிக் கொள்ள வைத்தது.
இதையடுத்து பேருந்து சென்ற திசையை அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து இரு சக்கர வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது மன்னார்புரம் அருகே தாறுமாறாக பேருந்து ஓடியதைக் கண்டு சினிமா பட பாணியில் ஓட்டுநரும் நடத்துநரும் டூவிலரில் விரட்டிச் சென்று மறித்து நிறுத்தினர்.
அப்போது பேருந்தை கடத்திய நபர் போதையில் இருந்ததால் உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் பேருந்தை கடத்திய நபர் பெயர் அஜித் குமார் என்பதும் விளையாட்டாக இந்தக் காரியத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் திருச்சி மன்னார்புரத்தை சேர்ந்தவர் என்பதும் அறிய வந்தது.
திரைப்படம் ஒன்றில் இது உங்கள் சொத்து என அரசுப் பேருந்தை சுட்டிக்காட்டி வடிவேலு நடித்துள்ள நகைச்சுவை காட்சிக்கு ஏற்ப திருச்சியில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக போதை ஆசாமி பேருந்து ஓட்டிச்சென்ற வழிதடத்தில் எந்த விபத்தும் ஏற்படாதது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications