கேட்டுகேட்டு புளிச்சிபோச்சி! வேறு ஏதாவது பேசுங்க! மோடியை நேராக தாக்கிய ஸ்டாலின்! பரபரப்பான பேச்சு
திருச்சி: திருச்சியில் இன்று நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இமாச்சலில் இருந்து கொண்டு திமுகவை சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி விமர்சனம் செய்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதில் திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 12,600 வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நாட்டில் வாழும் பல்வேறு தேசிய இனங்களை சார்ந்தவர்கள், பல்வேறு மொழியை பேசும் மக்கள், பல்வேறு பண்பாட்டு கொண்டவர்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட கட்சி தான் பாஜக. நாட்டில் ஒற்றை கட்சியாக இருக்க வேண்டும் என நினைக்கும் பாஜக நினைக்கிறது. ஒற்றை கட்சி ஆட்சி அமைந்தால் ஒருவர் கையில் தான் அதிகாரம் இருக்கும்.
இதனை தடுப்பதற்காக தான் 26 கட்சிகள் கொண்ட கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டி இருக்கிறோம். இந்தியாவை காப்பாற்ற போவது இந்த இந்தியா கூட்டணி தான். இதனை மோடியால் தாங்கி கொள்ள முடியவில்லை. பாஜகவை வீழ்த்த ஒரு வலுவான அணி அமைத்து விட்டார்களே என பேசி வருகிறார்.
இதனை நான் கடந்த ஓராண்டு காலமாக பேசி வருகிறேன். இதனால் தான் என் மீது அவர்களுக்கு கோபம். தான் மத்திய பிரதேசம் போனாலும் திமுகவை திட்டுகிறார்கள். அந்தமான் விமான நிலையம் திறந்து வைத்தாலும் திமுகவை திட்டுகிறார். பிரதமர் என்ன சொல்கிறார். வாரிசுகளுக்கான கட்சி. கேட்டு கேட்டு புளிச்சிப்போச்சு. வேறு ஏதாவது பேச கண்டுபிடித்து சொல்லுங்கள். ஆமாம், இது வாரிசுகளுக்கான கட்சி தான். ஆரியத்தை வீழ்த்த திராவிட வாரிசுகளுக்கான கட்சி இதுதான்.
பெரியார், அண்ணா, கருணாநிதியின் வாசுகளுக்கான கட்சி. இதனை தைரியமாக, பெருமையாக சொல்ல முடியும். ஆனால் பாஜக யாருடைய வாரிசு? கோட்சேவின் வாரிசு தான் நீங்கள். இதனை தைரியமாக சொல்ல முடியுமா? குஜராத்தில் 2002ல் நடந்ததை நாடு மறக்கல. இன்று மணிப்பூர் அதனை நினைவுப்படுத்தி வருகிறது.
மே மாதம் 3ம் தேதி தொடங்கிய வன்முறையை இன்னும் கட்டுப்படுத்தாமல் மணிப்பூர் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மத்திய அரசும், மாநில போலீசாரும் இணைந்து மக்களை தாக்கி கொண்டு வருகின்றனர். இதனை ஸ்டாலின் சொல்லவில்லை. பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரே சொல்லி இருக்கிறார்'' என கடுமையாக சாடினார்.












Click it and Unblock the Notifications