ஜெயலலிதா ஆவி சசிகலாவை விடலையே.. தமிழ்நாட்டைவிட்டே அகற்றி ஜெயிலில் தள்ளியது: அதிமுக மாஜி எம்.பி பரபர!
திருச்சி : எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ப.குமார், ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்துப் பேசியதோடு, சசிகலாவையும் விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆவி அவர்களை சும்மா விடவில்லை. இந்தத் தமிழ்நாட்டை விட்டு அகற்றி அண்டை மாநில ஜெயிலில் கொண்டு போய் சசிகலாவை விட்டது.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளாரும், முன்னாள் எம்.பியுமான ப.குமார் கலந்துகொண்டு பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆவி சசிகலாவை ஜெயிலில் தள்ளியது எனப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி தலைமையில் தான் அதிமுக.. மற்றெதல்லாம் புழு.. 'இரட்டை இலையில் போட்டி’ : சீறிய மாஜி அமைச்சர்!
ஜெயலலிதா ஆவி
இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் எம்.பி ப.குமார் பேசுகையில், "ஜெயலலிதா எப்போது மறைவார், இந்த இயக்கத்தை குறுக்கு வழியில் நாம் கைப்பற்ற வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தோடு சசிகலா இந்த இயக்கத்தை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆவி அவர்களை சும்மா விடவில்லை. தமிழ்நாட்டை விட்டு அகற்றி அண்டை மாநில ஜெயிலில் கொண்டு போய் சசிகலாவை விட்டது.
ஓபிஎஸ் அணி மா.செக்கள்
ஜெயிலில் இருந்து வந்ததற்குப் பிறகும் சசிகலா திருந்தவில்லை. ஒரு டெம்போவையும், ஒரு டிவியும் வைத்துக்கொண்டு நான் தான் பொதுச் செயலாளர் என சுற்றிக் கொண்டிருக்கிறார். உள்ளூர் டீக்கடையில் கூட நம்பி கடன் கொடுக்க முடியாத ஆட்களை எல்லாம் ஓபிஎஸ் மாவட்டச் செயலாளராகப் போட்டிருக்கிறார். பாஜக மற்றும் திமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, நம்முடைய இயக்கத்தை அழிக்க வேண்டுமென ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார்.
ஓபிஎஸ் இடையூறு
ஓ.பன்னீர்செல்வம் 2021 பொதுத்தேர்தல் சமயத்தில் என்னென்ன இடையூறுகளைச் செய்தார். அதையும் தாண்டி எடப்பாடியார் தலைமையில் 75 சட்டமன்ற உறுப்பினர்களை நாம் பெற்றோம். நம்முடைய இயக்கத்திற்கு ஓபிஎஸ் எந்த இடையூறு செய்தாலும் அதை நம் தொண்டர்களும் எடப்பாடியாரும் முறியடிப்பார்கள். யார் நினைத்தாலும் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை அழிக்க முடியாது.
திமுக ஆட்சி போய்விட்டால்
மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று பேசுகிறார். ஆனால், கருணாநிதி குடும்பத்தைப் பொறுத்தவரை, திமுகவையும், தமிழ்நாட்டையும் அபகரிக்க நினைக்கும் திருட்டு மாடல் அரசாக இருக்கின்றனர். உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி இருக்கின்றனர். திமுக ஆட்சி போய்விட்டால் உதயநிதி ஸ்டாலினால் தேர்தலில் போட்டியிட்டு ஒரு கவுன்சிலராகக்கூட ஆக முடியாது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸிற்கு விட்டுக்கொடுத்துவிட்டு, ஸ்டாலின் பின்வாங்கிவிட்டார்.
வாய்க்கொழுப்பு
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தபோதே ஈரோடு கிழக்குத் தொகுதியில் நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஏனென்றால், கருணாநிதி உட்பட எல்லோரையும் அவ்வளவு வாய்க்கொழுப்பாகப் பேசியிருக்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். எம்.ஜி.ஆருக்கு எப்படி திண்டுக்கல் தேர்தல் வெற்றியோ, அதேபோல அண்ணன் எடப்பாடியாருக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றி உறுதி" எனத் தெரிவித்தார்.