நிலத்தில் முதலீடு! பெருமைக்கு ஊரெங்கும் கிளைகள்! அகலக்கால் வைத்த பிரணவ் ஜுவல்லர்ஸ் ஓனர்!
திருச்சி: திருச்சியை தலைமையிடமாக கொண்டு தமிழகமெங்கும் கிளைகளை திறந்து, முதலீட்டாளர்களை இன்று நடுவீதியில் நிறுத்தியுள்ள ப்ரணவ் ஜுவல்லர்ஸ் ஓணர் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் இங்கே பார்க்கலாம்.
ப்ரணவ் ஜுவல்லர்ஸ்: திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 7 ஊர்களில் ப்ரணவ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை திறந்தவர் மதன் செல்வராஜ். இவர் திருச்சியை பூர்வீகமாக கொண்டவர். மதன் செல்வராஜின் தந்தை திருச்சி சின்ன கம்மாளத் தெருவில் சிறியளவில் வெள்ளி நகைகள் வியாபாரம் செய்து வந்தவர். வெள்ளிக்கொழுசு உள்ளிட்ட பொருட்களை பழுதுபார்த்தும் கொடுத்தவர். தந்தையிடமிருந்து வெள்ளி நகை வியாபாரத்தை கற்றுக்கொண்ட மதன் செல்வராஜ், மெல்ல தங்க நகை வியாபாரத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்.

வியாபாரம் சூடு பிடித்தது: பழைய நகைகளை வாங்கி விற்பது, அடகு கடை நடத்துவது, என படிப்படியாக தொழிலை வளர்த்துக் கொண்ட மதன் செல்வராஜ், ப்ரணவ் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் திருச்சியில் ஷோரூம் திறந்ததோடு சொந்தமாக பால் பண்ணை ஒன்றையும் நடத்தினார். 0% செய்கூலி, சேதாரம் என்றும் தங்களிடம் நகை வாங்கினால் சவரனுக்கு 4,000 ரூபாய் வரை சேமிக்கலாம் எனவும் கவர்ச்சிக்கர விளம்பரங்கள் வெளியிடப்பட்டதால் திருச்சி ப்ரணவ் ஜுவல்லர்ஸில் வியாபாரம் சக்கை போடு போட்டது. இதனால் திருச்சியில் காலம் காலமாக உள்ள பிரபல நகைக்கடையிலேயே வியாபாரம் மந்தமானது.
கணக்கு வழக்கில்லாமல்: நகைக்கடை ஆரம்பித்த சில நாட்களிலேயே கணக்கு வழக்கில்லாமல் கோடிகளில் பணம் குவியத் தொடங்கியது. இதனால் ஊரெங்கும் கிளைகளை தொடங்க முடிவெடுத்த மதன் செல்வராஜ், 3 லட்ச ரூபாய் வரை மாட வாடகை கொடுத்து பல ஊர்களில் கடைகளை திறந்தார். அதுமட்டுமல்ல ஒவ்வொரு கடையை திறக்கும் போதும், இண்டீரியர் வேலைபாடுகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார். நகை விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்யாமல் ரியல் எஸ்டேட் பக்கம் ஆர்வம் காட்டியிருக்கிறார் மதன் செல்வராஜ்.
அகலக்கால் வைத்ததன் விளைவாகவே இன்று தன்னை நம்பி நகைச்சீட்டு பணம் கட்டியவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் அனைத்துக் கிளைகளையும் மூடிவிட்டு தலைமறைவாக இருந்து வருகிறார் மதன் செல்வராஜ்.












Click it and Unblock the Notifications