கையில் ஸ்பீக்கரோடு வந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி.. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திருச்சி : கொள்ளிடம் ஆற்றில் 2 லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால், கரையோர மக்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
Recommended Video
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது . இதனையடுத்து, அணையின் பாதுகாப்பைக் கருதி, உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 20 நாட்களில் அணைக்கு 132 டி.எம்.சி. தண்ணீர் வந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 100 டி.எம்.சி வெள்ளநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைந்து, அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது.
தனியார் பள்ளிகளில் தான் அதிக தற்கொலை! காரணம் என்ன தெரியுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன விளக்கம்!
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடியும், கல்லணையில் இருந்து 50 ஆயிரத்து 520 கன அடி வீதம் என இரண்டு லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் செல்கிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஒடுகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளில் அமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பாக மேடான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். பட்டுக்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய பகுதியில் உள்ள கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் நேரடியாக அமைச்சர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அய்யம்பேட்டை அருகே கூடலூர் கிராமத்தில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது. மேலும் தற்போது நடவு செய்துள்ள குறுவை நெற்பயிரும், வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கின. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். வெள்ள நீர் விளை நிலங்களுக்குள் புதுந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சத்து 5 ஆயிரம் கன அடி தண்ணீர் செய்வதால் மக்கள் பாதுகாப்பாக மேடான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார். பட்டுக்குடி, குடித்தாங்கி, கூடலூர் உள்ளிட்ட 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்து உள்ளார். வெள்ளநீர் கரை புரண்டு ஓடிவருவதால் கொள்ளிடத்தின் இருபுறமும் ஒலிபெருக்கிகள் மூலம் கிராமபுற பொதுமக்களுக்கும், மீன் பிடிப்பவர்களுக்கும், செல்ஃபி எடுப்பவர்களுக்கும், ஆடு மாடு மேய்ப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.